• Tue. Aug 25th, 2026
WhatsAppImage2026-08-20at214238
previous arrow
next arrow
Read Now

மாவட்ட அளவிலான கலைத்திருவிழா போட்டிகளை தொடங்கி வைத்த முதன்மைக்கல்வி அலுவலர்..,

Byமுகமதி

Aug 25, 2026

புதுக்கோட்டை மாவட்ட பள்ளிக்கல்வித் துறையின் சார்பில் 2026-2027- ஆம் ஆண்டிற்கான மாவட்ட அளவிலான இளையோர் திறன் என்ற கருப்பொருளை மையமாகக்கொண்ட கலைத்திருவிழா போட்டிகள் துவக்க விழா புதுக்கோட்டை அருள்மிகு பிரகதம்பாள் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தேர்வுக்கூட அரங்கில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவரையும் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வியின் உதவித்திட்ட அலுவலர் செந்தில் வரவேற்றார். நிகழ்ச்சிக்கு முதன்மைக்கல்வி அலுவலர் கூ.சண்முகம் கலந்துகொண்டு தலைமை தாங்கி கலைத்திருவிழா போட்டிகளை தொடங்கி வைத்துப் பேசும்போது கூறியதாவது, கடந்த வருடங்களில் நமது புதுக்கோட்டை மாவட்டம் கலைத்திருவிழாப் போட்டிகளில் மாநில அளவில் 3- ம் இடமும், கலையரசி பட்டத்தினையும் வென்று சாதனை படைத்திருந்தது. இதேபோல கடந்த ஆண்டு 10- ம் வகுப்பு அரசுப்பொதுத்தேர்வில் மாநில அளவில் நமது புதுக்கோட்டை மாவட்டம் முதலிடத்தினை பிடித்து சாதனை படைத்தது.

இவ்வாறாக கல்வி சாரா இணைச்செயல்பாடுகளிலும், கல்விச்செயல்பாடுகளிலும் நமது புதுக்கோட்டை மாவட்டம் சிறப்பிடம் பெறுவதற்குக் காரணமான மாணவர்கள், பெற்றோர்கள், தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள், அலுவலர்கள் அனைவருக்கும் வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறேன். கடந்த வருடங்களைப் போல இந்த ஆண்டும் கலைத்திருவிழா உள்ளிட்ட கல்விசாரா இணைச்செயல்பாடுகளிலும், 10, 12 – ஆம் வகுப்புகளில் அரசுப் பொதுத்தேர்வுகளிலும் மாநில அளவில் நமது புதுக்கோட்டை மாவட்டம் முதன்மையான இடத்தினைப் பெற அனைவரும் சிறப்பாக செயலாற்றவேண்டும்.

எனவே கலைத்திருவிழாப் போட்டிகளுக்கு நடுவர்களாக நியமனம் செய்யப் பட்டிருப்பவர்கள் எவ்விதப் புகாருக்கும் இடமளிக்காத வகையில் சிறப்பாக செயல்படுமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று அவர் பேசினார்.

இந்நிகழ்ச்சியில் புதுக்கோட்டை மாவட்டக்கல்வி அலுவலர்( இடைநிலை) ராஜூ, புதுக்கோட்டை தனியார் பள்ளிகள் மாவட்டக்கல்வி அலுவலர் பழனிவேலு, மாவட்டக்கல்வி அலுவலர்கள்( தொடக்கக் கல்வி) புதுக்கோட்டை கனகராணி, அறந்தாங்கி கலாராணி, மாவட்டச் சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் முனைவர் சாலை செந்தில், பள்ளித்துணை ஆய்வாளர்கள் வேலுச்சாமி, குருமாரிமுத்து , மேல்நிலை, உயர்நிலைப் பள்ளிகளின் தலைமையாசிரியர்கள், வட்டாரக்கல்வி அலுவலர்கள், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வியின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள், வட்டார வள மைய மேற்பார்வையாளர்கள், வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுனர்கள் மற்றும் பலர் கலந்துகொண்டனர். நிறைவாக முதன்மைக்கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர்( மேல்நிலை) திருமேனிநாதன் நன்றி கூறினார்.