கோவை, அவினாசிலிங்கம் கல்லூரியில் இருந்து GCT கல்லூரி செல்லும் சாலையில் பெண் ஓட்டிச் சென்ற சொகுசு கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து மின் கம்பத்தில் மோதி தீப்பிடித்து எரிந்து சாம்பலானது. காரை ஓட்டிச் சென்ற பெண் அதிர்ஷ்டவசமாக எவ்விதக் காயமுமின்றி உயிர் தப்பினார்.

கோவை வெங்கடாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சாந்தா (50). இவர் இன்று பிற்பகல் நேரத்தில் அவினாசிலிங்கம் கல்லூரியில் சாலையில் இருந்து GCT கல்லூரி நோக்கித் தனது காரில் சென்று கொண்டு இருந்தார். அப்போது, வெங்கடாபுரம் அருகே கார் வந்த போது எதிர்பாராத விதமாகக் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரம் இருந்த மின்கம்பத்தின் மீது பயங்கரமாக மோதியது.

மோதிய வேகத்தில் காரின் முன்பகுதியில் இருந்து திடீரெனப் புகை வெளியேறி, நொடிப் பொழுதில் தீ கொழுந்து விட்டு எரியத் தொடங்கியது. இதனால் அதிர்ச்சி அடைந்த சாந்தா, உடனடியாகச் சமயோசிதமாக காரில் இருந்து வெளியே குதித்துத் தப்பினார்.
தகவலறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீயைக் கட்டுப்படுத்துவதற்குள் கார் முற்றிலும் எரிந்து சாம்பலானது.
விபத்து நடந்த நேரம் பிற்பகல் வேளை என்பதால், அந்தச் சாலையில் ஆள் நடமாட்டம் மற்றும் வாகனப் போக்குவரத்து குறைவாகவே இருந்தது. இதனால் மிகப்பெரிய உயிர்ச்சேதமும் அசம்பாவிதமும் தவிர்க்கப்பட்டது.

இச்சம்பவம் குறித்து போக்குவரத்து பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விபத்துக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.




