மும்பையில் உள்ள கார் ஷோரூமில் பெரும் தீவிபத்து ஏற்பட்டது. எனினும், இதனால் எந்தவொரு உயிர் சேதமும் ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள போவாய் பகுதியில் சகி விஹார் சாலையில் உள்ள சாய் ஆட்டோ ஹுண்டாய் ஷோரூம் கராஜில் இன்று காலை 11 மணியளவில் பெரும் தீவிபத்து ஏற்பட்டது.இதையடுத்து, ஐந்து தீயணைப்பு வாகனங்களும், தண்ணீர் லாரிகளும் அப்பகுதிக்கு விரைந்தன. தீயை அணைக்க நீண்ட நேரமாக தீயணைப்பு வீரர்கள் போராடி வருவதாக தீயணைப்பு அதிகாரிகள் வட்டாரத்தில் கூறுகின்றனர்.
முதற்கட்ட தகவல்படி, தீவிபத்தால் யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை. அதேபோல, அதிர்ஷ்டவசமாக யாருக்கும் உயிர் சேதம் ஏற்படவில்லை. தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணமும் தெரியவில்லை. இதுகுறித்து விசாரணை நடத்தி வருவதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.