சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலையை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்தியாவில் அவசர கால பயன்பாட்டிற்காக சேகரித்து வைக்கப்பட்டுள்ள கச்சா எண்ணெயை பயன்பாட்டுக்கு கொண்டுவர மத்திய அரசு முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியிருப்பது, வாகன ஓட்டிகளின் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதன்மூலம், இந்தியாவில், பெட்ரோல், டீசல் உள்ளிட்டவற்றின் விற்பனை விலை மேலும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அவசர காலங்களில் பயன்படுத்துவதற்காக 53 லட்சத்து 33 ஆயிரம் டன் கச்சா எண்ணெயை ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம், மற்றும் கர்நாடக மாநிலம் மங்களூரு, படூர் ஆகிய 3 இடங்களில் சேமித்து வைக்கப்பட்டுள்ள நிலையில், அதிகமாக கச்சா எண்ணெய் பயன்படுத்தும் இந்தியா, ரஷ்யா, சீனா உள்ளிட்ட நாடுகள் அவை சேமித்து வைத்திருக்கும் கச்சா எண்ணெயை பயன்பாட்டுக்குக் கொண்டுவர அமெரிக்கா வலியுறுத்தியது.
கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகப்படுத்தும் நடவடிக்கையை துரிதப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைக்கு OPEC எனப்படும் பெட்ரோலிய ஏற்றுமதி நாடுகள் செவி சாய்க்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனையடுத்து சேமிப்பில் உள்ள மொத்தம் 3 கோடியே 80 லட்சம் கச்சா எண்ணெய் பீப்பாய்களில் முதற்கட்டமாக 50 லட்சம் பீப்பாய்களை பயன்பாட்டுக்கு கொண்டுவர மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.