விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை பெரிய புளியம்பட்டியில் காட்டு பன்றிகளால் விவசாயிகள் படும் துயரத்தை கண்டு கொள்ளாத மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து விவசாயிகள் கருப்புக் கொடி கட்டி போராட்டம் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது.
அருப்புக்கோட்டையில் பெரியபுளியம்பட்டி, சின்ன புளியம்பட்டி, பாளையம்பட்டி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் மக்காச்சோள பயிர்கள் பயிரிடப்பட்டுள்ளன. இந்நிலையில் இந்த பயிர்களில் நூற்றுக்கணக்கான ஏக்கர் பயிர்களை நன்கு வளர்ந்து வந்த நிலையில் காட்டு பன்றிகள் கூட்டம் கூட்டமாக வந்து அழித்து நாசம் செய்துள்ளன. கடந்த 10 வருடங்களாக காட்டுப்பன்றிகள் தொல்லை அதிகரித்துக் கொண்டே வருகிறது. இது குறித்து பலமுறை மாவட்ட நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லை எனக் கூறியும், காட்டுப்பன்றிகளால் தொடர்ந்து விவசாயிகள் நஷ்டத்தை அடைந்து வருவதாகவும் புளியம்பட்டி பகுதியில் இன்று (15.11.23) புளியம்பட்டி மானாவாரி விவசாயிகள் தங்கள் தெருக்களில் கருப்புக்கொடி கட்டி மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.