மத்திய அரசு அறிவித்துள்ள ‘அக்னிபத்’ எனும் புதிய ராணுவ திட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் இளைஞர்கள் போராடி வருகின்றனர். சில இடங்களில் ரயில் எரிப்பு சம்பவங்களும், வன்முறைகளும் அரங்கேறியுள்ளன.
இந்நிலையில், இந்த திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, விவசாய சங்கங்களின் கூட்டமைப்பான சம்யுக்த கிசான் மோர்ச்சா சார்பில் வரும் 24-ம் தேதி போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, விவசாயிகள் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் பாரதிய கிசான் சங்க செய்தித் தொடர்பாளர் ராகேஷ் திகாயத் நேற்று வெளியிட்ட ட்விட்டர் பதிவில், “நாடு முழுவதும் மாவட்ட தலைநகரங்கள் உள்ளிட்ட இடங்களில் இந்தப் போராட்டம் நடைபெறும்.ஹரியானா மாநிலம் கர்னாலில் நடைபெற்ற சம்யுக்த கிசான் மோர்ச்சா ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டது.
வரும் 24-ம் தேதி நடைபெறும் இந்த போராட்டத்தில் இளைஞர்கள், பொதுஜன அமைப்பினர் மற்றும் அரசியல் கட்சியினரை திரளாக பங்கேற்கச் செய்ய வேண்டும்.
அக்னிபத் திட்டத்தை எதிர்த்து எங்களின் பாரதிய கிசான் சங்கம் சார்பில் வருகிற 30-ம் தேதி போராட்டம் நடத்தப்படும் என்று முன்பு தெரிவித்திருந்தோம். அந்த போராட்டமும் 24-ம் தேதியே நடைபெறும்” என்று தெரிவித்துள்ளார்.