• Sun. Nov 9th, 2025
WhatsAppImage2025-11-07at0137034
previous arrow
next arrow
Read Now

விபத்தை மறைக்க முயன்ற விவசாயி தற்கொலை!!

ByK Kaliraj

Nov 1, 2025

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே ஏழாயிரம்பண்ணைஅருகே உள்ள வல்லம்பட்டியை சேர்ந்தவர் நரசிம்மராஜ் வயது 45 இவருக்கு சொந்தமான மக்காச்சோள தோட்டத்தில் மின்வேலி அமைத்து இருந்ததாக தெரிய வருகிறது. கடந்த நான்கு தினங்களுக்கு முன்பு விருதுநகர் அருகே உள்ள குல்லூர் சந்தை கிழக்கு தெருவை சேர்ந்த சுரேஷ் வயது 46 என்பவர் காணாமல் போனதாக அவரது மனைவி ஆண்டிச்சி சூலக்கரை போலீஸ் ஸ்டேஷனில் புகார் செய்துள்ளார்.

அதன் பேரில் சூலக்கரை போலீஸ் வழக்கு பதிவு செய்து காணாமல் போன சுரேஷை தேடி வந்த நிலையில் வல்லம்பட்டி விவசாய கிணற்றில் ஒருவர் தவறி விழுந்து கிடப்பதாக ஏழாயிரம் பண்ணை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அதன் பேரில் தீயணைப்பு நிலைய அலுவலர் மாரியப்பன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் கிணற்றுக்குள் இறங்கி இரண்டு மணி நேரம் கழித்து இறந்தவர் உடலை மீட்டனர்.

இறந்தவர் உடல் அடையாளம் தெரியாததால் மற்ற போலீஸ் ஸ்டேஷனுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது சூலக்கரை போலீசார் நேரில் வந்து விசாரணை நடத்தியதில் இறந்தது காணாமல் போன சுரேஷ் என்பது தெரியவந்தது. முதல் கட்ட விசாரணையில் முயலை பிடிக்க சென்றவர் தடுமாறி கிணற்றில் விழுந்து இறந்திருக்கலாம் என ஏழாயிரம் பண்ணை போலீசார் விசாரணை செய்து கொண்டிருந்தபோது தோட்டத்தின் உரிமையாளர் நரசிம்மராஜ் வயது 45 தூக்கு போட்டு இறந்ததாக தகவல் கிடைத்தது.

உடனடியாக வெம்பக்கோட்டை இன்ஸ்பெக்டர் நம்பிராஜன் ஏழாயிரம் பண்ணை சப்-இன்ஸ்பெக்டர் பாலசுப்ரமணியன் ஆகியோர் நேரில் விசாரணை நடத்தினார்.

அப்போது நரசிம்மராஜனின் மனைவி செல்வி நரசிம்மராஜ் வீட்டுக்கு பதற்றத்துடன் வந்தவர் கயிறு வேண்டும் என கேட்டார். ஆடு கட்டுவதற்கு தான் கயிறு கேட்டார் என நினைத்து கயிறு கொடுத்தோம் ஆனால் சிறிது நேரத்தில் கயிற்றினால் தூக்கு போட்டு தற்கொலை செய்துள்ளார். காரணம் தெரியவில்லை என வீட்டினர் தெரிவித்தனர்.

தொடர்ந்து விசாரணை நடத்தியதில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு விவசாய தோட்டத்தில் இருந்த மின்வேலியில் முயல் பிடிக்க வந்த சுரேஷ் சிக்கி இறந்துள்ளார்.

யாருக்கும் தெரியாமல் இருக்க நரசிம்மராஜ் சுரேஷின் உடலை கிணற்றுக்குள் தள்ளியுள்ளார். உடல் மிதந்ததால் அதிர்ச்சி அடைந்தவர் போலீஸ் விசாரணையில் அகப்பட்டு விடுவமோ என நினைத்து பயத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்ததாக போலீசார் விசாரணையில் உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி நரசிம்மராஜ் உடலை பிரேத பரிசோதனைக்காக சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சுரேஷின் உடலை விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்தை மறைக்க முயன்று விவசாயி தற்கொலை செய்தது அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியது