புகழ்பெற்ற மல்யுத்த வீராங்கனையான சாரா லீ காலமானார். அவருக்கு வயது 30. சாராவின் திடீர் மரணம், மல்யுத்த உலகைச் சேர்ந்தவர்களையும் ரசிகர்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
கடந்த 1992-ம் ஆண்டு ஜூன் மாதம் 7-ம் தேதி, அமெரிக்காவின் மிச்சிகன் மாநிலத்தில் உள்ள ஹோப் டவுன்ஷிப் பகுதியில் பிறந்தவர் சாரா லீ. இளம் வயதிலிருந்தே வலு தூக்கும் விளையாட்டில் ஆர்வம் கொண்டிருந்தார். பின்னர் மல்யுத்த போட்டிகளில் கலந்துகொண்டு புகழ்பெற்றார்.
கடந்த 2015-ம் ஆண்டு, டபிள்யூ.டபிள்யூ.ஈ (WWE) நடத்திய ‘டஃப் இன்ஃப்’ ரியாலிட்டி நிகழ்ச்சியில் முதல் பரிசை வென்ற இருவரில் சாராவும் ஒருவர். சாரா லீயின் கணவர் வெஸ்டின் பிளேக்கும் மல்யுத்த வீரர்தான். இந்தத் தம்பதிக்கு 3 குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில், சாரா லீ நேற்று (அக்.7-ம் தேதி) மரணமடைந்ததாக அவருடைய தாயார் டெர்ரி லீ சமூகவலைதள பதிவில் தெரிவித்திருக்கிறார். ஆனால், சாரா லீ மரணமடைந்தது எப்படி எனும் விவரம் வெளியிடப்படவில்லை.
சாரா லீயின் மறைவுச் செய்தி அறிந்து சர்வதேச மல்யுத்த வீரர்களும், வீராங்கனைகளும் ட்விட்டரில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். ஏராளமான ரசிகர்களும் அவருக்கு அஞ்சலி தெரிவித்திருக்கின்றனர்.