உலகம் முழுவதும் செயல்பட்டு வரும் பிரபல கேளிக்கை பூங்கா நிறுவனமான வால்ட் டிஸ்னி 7,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய முடிவு செய்துள்ளது.
உலகின் முன்னணி நிறுவனங்கள் அதிரடியாக வேலை நீக்க நடவடிக்கையை எடுத்து வரும் நிலையில் அந்த பட்டியலில் தற்போது வால்ட் டிஸ்னி நிறுவனமும் இணைந்துள்ளது. உலகம் முழுவதும் உள்ள பணியாளர்கள் மத்தியில் லே ஆஃப் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. பேஸ்புக், ட்விட்டர், கூகுள், மைக்ரோசாஃப்ட், போயிங் என பல முன்னணி நிறுவனங்கள் வேலை நீக்க நடவடிக்கையை எடுத்து வருகின்றன. பொருளாதார நெருக்கடி காரணமாக வேலை நீக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், தற்போது புகழ்பெற்ற வால்ட் டிஸ்னி நிறுவனம் உலகம் முழுவதும் 7,000 ஊழியர்களை வேலை நீக்கம் செய்யப் போவதாக அறிவித்துள்ளது. வால்ட் டிஸ்னி கேளிக்கை பூங்கா பல்வேறு நாடுகளில் உள்ளது. வால்ட் டிஸ்னியில் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். கொரோனா காலத்தில் வால்ட் டிஸ்னி 32 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்தது. இந்நிலையில், தற்போது பொருளாதார நெருக்கடி காரணமாக 7,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்வதாக வால்ட் டிஸ்னி நிறுவனம் அறிவித்துள்ளது. இதனால் அந்நிறுவன ஊழியர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.