ஈரோடு இடைத்தேர்தலில் வேட்புமனு செய்ய கடந்த 7ம் தேதி கடைசி நாளாகும் .இந்நிலையில் பரிசீலனைக்கு பிறகு 83 வேட்பு மனுக்கள் ஏற்ப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் 27-ந் தேதி நடக்கிறது. இதில் போட்டியிட ஜனவரி 31-ந் தேதி முதல் வேட்புமனுக்கள் பெறப்பட்டன. 7-ந் தேதி வேட்புமனுக்கள் வழங்க இறுதி நாளாகும். அன்றைய தினம் மாலை 7 மணியை கடந்தும் வேட்புமனுக்கள் பெறப்பட்டன. கடைசி நாளில் இறுதி நேரத்தில் (பிற்பகல் 3 மணிக்கு) 26 பேர் வேட்புமனுக்களுடன் வந்தது பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது. முக்கிய அரசியல் கட்சி வேட்பாளர்கள் உள்பட 96 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். மாற்று வேட்பாளர் மனு, கூடுதல் மனு என்று மொத்தம் 121 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு இருந்தன. இந்த மனுக்கள் மீதான பரிசீலனை நேற்று நடந்தது. இடைத்தேர்தல் பொது பார்வையாளர் ராஜ்குமார் யாதவ் முன்னிலையில் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரியும், மாநகராட்சி ஆணையாளருமான சிவக்குமார் தலைமையில் உதவி தேர்தல் நடத்தும் அதிகாரி முத்துக்கிருஷ்ணன், மாநகராட்சி செயற்பொறியாளர் விஜயகுமார் மற்றும் தேர்தல் அதிகாரிகள் வேட்புமனுக்களை ஆய்வு செய்தனர். அதன்படி மொத்தம் 38 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. 83 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.