தமிழகத்தில் சென்னை, தாம்பரம், ஆவடி, காஞ்சிபுரம், திருச்சி மதுரை, கோவை உள்பட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 489 பேரூராட்சிகளுக்கு ஒரே கட்டமாக கடந்த 19ம் தேதி தேர்தல் நடைபெற்றது.
இந்த தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. தேர்தலில் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள், திருநங்கைகள், மாற்றுத்திறனாளி வேட்பாளர் என பலரும் வெற்றி வாகை சூடியுள்ளனர். அதன் விவரம் பின்வருமாறு
சாதித்த தாய் – மகன்:
- மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சியில் 13, 8வது வார்டில் சுயேட்சையாக போட்டியிட்ட தாய் வள்ளிமயில், மகன் மருதுபாண்டியன் வெற்றிபெற்றனர்.
குடும்பங்கள் கொண்டாடும் மாமியார், மருமகள் வெற்றி:
- விருதுநகரில் 26, 27வது வார்டில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட மருமகள் சித்தேஸ்வரி, மாமியார் பேபி வெற்றிபெற்றனர்.
மாஸ் காட்டிய தம்பதி:
- திருவாரூர் நகராட்சி தேர்தலில் 1வது வார்டு மற்றும் 2வது வார்டில் அதிமுக சார்பில் போட்டியிட்ட கலியபெருமாள், மலர்விழி தம்பதி வெற்றிபெற்றனர்.
- திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி நகராட்சி 21வது வார்டில், திமுக முன்னாள் அமைச்சர் நாராயணசாமியின் பேத்தி மீனாட்சி சூரியபிரகாஷ் வெற்றி பெற்றார்.
அசத்தல் வெற்றிபெற்ற தம்பதியினர்:
- அலங்காநல்லூர் பேரூராட்சியில் திமுக சார்பில் 4,5வது வார்டில் போட்டியிட்ட மனைவி ரேணுகா ஈஸ்வரி, கணவன் கோவிந்தராஜ் வெற்றிபெற்றனர்.
மாற்றுத்திறனாளி வேட்பாளர் வெற்றி:
- நெல்லை மாவட்டம் ஏர்வாடி பேரூராட்சி 7வது வார்டில் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் போட்டியிட்ட மாற்றுத்திறனாளி நியாஸ் வெற்றிபெற்றார்.
திருநங்கை கங்கா நாயக் வெற்றி:
- வேலூர் மாநகராட்சி 37வது வார்டில் திமுக சார்பில் போட்டியிட்ட திருநங்கை கங்கா நாயக் வெற்றி பெற்றார்.