தமிழகத்தில் மழையால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர் பிரதம மந்திரியின் பயிர் காப்பீடு திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும் பாராளுமன்றத்தில் ப.ரவீந்திரநாத் எம்.பி கோரிக்கை விடுத்துள்ளார்.
பாராளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. இக்கூட்டத்தில் தேனி தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் ப.ரவீந்திரநாத் பேசினார். அவர் பேசும்போது, அரசு விவசாயிகளுக்காக பிரதான் மந்திரி ஃபசல் பீமா யோஜனா திட்டத்தை அறிமுகம் செய்தது.
பயிர்காப்பீட்டு திட்டத்திற்கு கடந்த ஆண்டை விட 305 கோடி உயர்த்தி 16000ம் கோடியை ஒதுக்கியுள்ளது. நாட்டில் 14.6 கோடி விவசாயிகள் நிலம் வைத்துள்ளனர். இதில் 12 சதவிகிதத்தினர் மட்டுமே பயிர்காப்பீட்டில் இணைந்துள்ளது கவலையளிக்கிறது.
நாட்டில் 52 சதவிகித விவசாய நிலங்கள் முறையான நீர்பாசன வசதி இல்லாமல் பருவ நிலையை சார்ந்துள்ளது. தமிழகத்தில் கடந்த சம்பா பருவத்தில் 13.01 இலட்சம் விவசாயிகளிடமிருந்து 3176.53 கோடியை காப்பீட்டு நிறுவனங்கள் சந்தா தொகையாக வசூலித்துள்ளன. ஆனால் இழப்பீடு என்று பார்த்தால் 6 லட்சம் விவசாயிகளுக்கு 1597 கோடி ரூபாய் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.
விவசாயிகளுக்கு அதிகபட்சமாக 19 சதவிகிதம் மட்டுமே இழப்பீடாக வழங்கப்படுகிறது. தமிழக விவசாயிகள் மழை வெள்ளத்தால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். விவசாயிகள் அதிகபட்ச இழப்பீடு தொகையை பெறுவதை உறுதி செய்யும் வகையில் ஊக்கத்தொகையுடன் இணைக்கப்பட்ட புதிய பயிர் காப்பீட்டு திட்டத்தை அரசு செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி பேசினார்.