• Thu. May 7th, 2026
WhatsAppImage2026-05-05at001329
previous arrow
next arrow
Read Now

முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன் உடல் மீட்பு

Byவிஷா

Feb 12, 2024

இமாச்சலப் பிரதேசம் சட்லஜ் நதியில் இருந்து சென்னை மாநகராட்சியின் முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமியின் உடல் 9 நாட்களுக்கு பிறகு மீட்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாநகராட்சி முன்னாள் மேயரும், மனிதநேயம் ஐஏஎஸ் அகாடமி அமைப்பை நடத்தி வருபவருமான சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமி. திரைப்பட இயக்குநரான வெற்றி துரைசாமி தனது அடுத்த அடுத்த படத்தின், படப்பிடிப்பு தளங்களை தேர்வு செய்ய நண்பர் கோபிநாத்துடன் இமாச்சல பிரதேசத்திற்கு சென்றிருந்தார்.
அங்கு கடந்த பிப். 4ஆம் தேதியன்று இவர்கள் சென்ற கார் கஷாங் நுல்லா மலைப்பாதையில் திடீரென கட்டுப்பாட்டை இழந்து சட்லெஜ் ஆற்றில் விழுந்தது. விபத்து குறித்து தகவலறிந்த சென்ற மீட்புப் படையினர், உயிருக்கு ஆபத்தான நிலையில் கோபிநாத்தை மீட்டனர். வெற்றி துரைசாமியும், உள்ளூரை சேர்ந்த கார் ஓட்டுநர் தன்ஜினும் காணாமல் போயினர். பின்னர் தன்ஜினின் சடலம் மீட்கப்பட்டது.
தேசிய மீட்பு படையினரும் தேடுதல் பணியின் போது ஆற்றில் கவிழ்ந்த காரில் வெற்றியின் செல்போன் கைப்பற்றப்பட்டது. தொடர்ந்து, ஆற்றங்கரையோரம் உள்ள பாறையில் மனித மூளையின் திசுக்கள் கண்டெடுக்கப்பட்டு அம்மாநில தடயவியல் மையத்தில் டிஎன்ஏ ஆய்விற்கு உட்படுத்தப்பட்டுள்ளது. தேடுதல் பணி ஒரு வாரம் நீண்ட நிலையில், விபத்து நடந்தபோது வெற்றி துரைசாமி ஆற்றில் விழுந்ததைப் போல, ஒரு பொம்மையை மாதிரியாக வைத்து அதன் போக்கை காவல்துறையினர் கண்காணித்தனர்.
இதனிடையே, வெற்றி துரைசாமியின் டிஎன்ஏ பரிசோதனை தொடர்பாக இமாச்சல் காவல்துறை சார்பில் தமிழ்நாடு காவல்துறை கடிதம் எழுதப்பட்டது. இதனையடுத்து சைதை துரைசாமி மற்றும் அவரது மனைவியின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு இமாச்சல் தடயவியல் மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. அங்கு கிடைக்கப்பெற்ற ரத்த மாதிரிகளுடன் காவலர்கள் தடயவியல் ஆய்வகத்திற்கு புறப்பட்ட நிலையில், அந்த செய்தி வந்தடைந்தது.
8 நாட்களாக தேடப்பட்டு வந்த வெற்றியின் உடலை மீட்பு படை வீரர்கள் சட்லஜ் நதியில் இருந்து கண்டெடுத்தனர். விபத்து நிகழ்ந்த பகுதியில் இருந்து 6 கிலோமீட்டர் தொலைவில் வெற்றியின் உடல் கிடைக்கப்பெற்றுள்ளது. நதியின் அடியில் இருந்து வெற்றியின் உடலை ஆழ்கடல் நீச்சல் வீரர்கள் மீட்டு வெளிக்கொண்டு வந்தனர். பின்னர் பிரேத பரிசோதனைக்காக வெற்றியின் உடல் ரெகாங்புவாவில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.