இபிஎஸ் தனது ஆதரவாளர்களுடன் அதிமுக தலைமை செல்லக்கூடாது ..மீண்டும் கலவரம் ஏற்படலாம் என ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி மனு.
ஜூலை 11 ஆம் தேதி அதிமுக பொதுக் குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஓபிஎஸ் தரப்பின் எதிர்ப்பை மீறி அக்கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். இந்த பொதுக் குழு நடந்த அதே நேரத்தில் ஓபிஎஸ் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சென்றார்.
அப்போது ஓபிஎஸ் தரப்புக்கும் இபிஎஸ் தரப்புக்கும் இடையே நடந்த கலவரத்தால் அங்கிருந்த பொருட்கள் சேதப்படுத்தப்பட்டன. மேலும், சிலர் காயமடைந்தனர். இதையடுத்து அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டது. இது தொடர்பாக சிபிசிஐடி போலீசார், விசாரணை நடத்தி வரும் நிலையில் அதிமுக தலைமை அலுவலகத்தின் சாவியை எடப்பாடி பழனிசாமியிடம் ஒப்படைக்க கோர்ட் உத்தரவிட்டது. மேலும், அதிமுக தலைமை அலுவலகத்திற்கு தொண்டர்களும் நிர்வாகிகளும் செல்ல ஒரு மாதம் தடை விதித்தது.72 நாட்களுக்கு பிறகு கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி,தனது ஆதரவாளர்களுடன் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு இன்று செல்கிறார் .
இந்நிலையில் டிஜிபி அலுவலகத்தில் ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி புகார் மனு அளித்துள்ளார். இதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர் அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற கலவரம் குறித்து சிபிசிஐடி விசாரணை தொடங்கியுள்ள நிலையில் தடயங்களை அழித்து மீண்டும்ஒரு கலவரத்தை ஏற்படுத்த இபிஎஸ் திட்டமிட்டுள்ளதாக குற்றம் சாட்டிய அவர் அதிமுக அலுவலகத்திற்கு செல்வது என்பது நீதிமன்றத்தை அவமதிக்கும் செயலாகும் என்றார்.