• Mon. Apr 21st, 2025

கோடம்பாக்கத்தில் அமலாக்கதுறை அதிகாரிகள் சோதனை

Byஜெ.துரை

Apr 4, 2025

சென்னை கோடம்பாக்கம் ஆற்காடு சாலையில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் அதிரடியாக சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னை கோடம்பாக்கம் ஆற்காடு சாலையில் செயல்பட்டு வருகிறது கோகுலம் சிட்பண்ட்ஸ். தமிழ்நாடு, கேரளா, கர்நாடகம், புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் பல்வேறு கிளைகளை வைத்து செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில் கோகுலம் சிட் பண்ட்ஸ் நிறுவனரும், சமீபத்தில் வெளியான எம்புரான் திரைப்படத்தின் தயாரிப்பாளரான கோகுலம் எ.எம்.கோபாலன் அலுவலகங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகின்றனர்.

கடந்த 2017 ஆம் ஆண்டு கோகுலம் சிட் பண்ட் தொடர்பாக தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, மற்றும் பாண்டிச்சேரி உட்பட 78 கிளைகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு இருந்தார்கள்.

இவர்கள் அளவுக்கு அதிகமான வருமானத்தை ஈட்டி வரி ஏய்ப்பு செய்ததன் அடிப்படையில் 2017 ஆம் ஆண்டு வருமான வரித்துறை சோதனை மேற்கொண்டது.இந்த சோதனை அடிப்படையில் பல்வேறு ஆவணங்களை அமலாக்கத் துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. அதன் அடிப்படையில் தற்பொழுது அமலாக்க துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

அமலாக்கத்துறையிடம் வருமானவரித்துறை அதிகாரிகள் அளித்த ஆவணங்கள் அடிப்படையில் இந்த சோதனை நடைபெற்று வருவதாகவும், ஏற்கனவே வரி ஏய்ப்பு நடைபெற்றதில் சட்டவிராத பண பரிமாற்றம் நடைபெற்று இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த சோதனையானது நடத்தப்பட்டு வருவதாகவும், சோதனை முடிவில் பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்கள் குறித்து, தகவல் வெளியிடப்படும் பணமும் அதிகாரிகள் தரப்பில் தகவல் தெரிவிக்கப்படுகிறது.