நீலகிரி மாவட்டத்தில் வருகிற 19-ந் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகளை அதிகாரிகள் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே தேர்தல் பணிகள் குறித்து பார்வையாளர் ஏ. ஆர். கிளாட்ஸ்டோன் புஷ்பராஜ், கூடலூர் பகுதியில் ஆய்வு செய்தார்.
அப்போது ஓவேலி பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்று வந்த தேர்தலுக்கான வேட்பு மனுதாக்கல் பணிகள், தேர்தல் பொருட்கள் இருப்பு குறித்தும், அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளி மற்றும் அரசு உயர்நிலைப்பள்ளியில் உள்ள வாக்குச்சாவடிகளை பார்வையிட்டார். இதைத்தொடர்ந்து தேர்தல் நாளில் வாக்காளர்கள் சிரமமின்றி வாக்களிக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்று அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். ஆய்வின்போது பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் இப்ராகிம் ஷா, உள்ளுர் பார்வையாளர், மாவட்ட வழங்கல் அலுவலர் பூபதி, செயல் அலுவலர் சி. ஹரிதாஸ் மற்றும் உதவித் தேர்தல் அலுவலர்கள் ஆகியோர் உடன் இருந்தனர்.
பின்னர் கூடலூர் நகராட்சி அலுவலகத்தையும் ஆய்வு செய்த தேர்தல் பார்வையாளர் ஏ.ஆர். கிளாட்ஸ்டோன் புஷ்பராஜ், வேட்புமனு தாக்கல் செய்தவர்களின் எண்ணிக்கை, ஆவணங்களை சரிபார்த்தல், தேர்தல் நாளில் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து உதவி அலுவலர்களிடம் ஆலோசனை நடத்தினார்.