மதுரை மாவட்டம் மேலூர் அருகே சிவகங்கை மாவட்ட எல்கையில் உள்ள கிராமம் கீரனூர். இங்கு 70 வயது மூதாட்டி ஒருவர் இறந்து போனார். துக்கம் விசாரிக்க சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பூவந்தியில் இருந்து ஏராளமானோர் கீரனூர் வந்துள்ளனர். மூதாட்டியின் உடல் அந்த கிராமத்தில் மயானம் ஒன்றில் அடக்கம் செய்யும் நிகழ்வு நடந்துள்ளது. அப்போது மழை பெய்ததால் அங்கிருந்த ஒரு மரத்தின் அடியில் கும்பலாக மழைக்கு ஒதுங்கியுள்ளனர். அப்போது அந்த மரத்தின் மீது திடீரென மின்னல் தாக்கி மரத்தடியில் நின்ற அனைவரும் தூக்கி வீசப்பட்டனர். அதிர்ச்சியில் பலர் மயக்கமடைந்தனர். இந்த சம்பவம் குறித்து, தகவல் அறிந்து சிவகங்கை தமராக்கி மற்றும் பூவந்தி ஆகிய இடங்களில் இருந்து வந்த ஆம்புலன்ஸ்கள் மூலம் அனைவரும் பல்வேறு ஆஸ்பத்திரிகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர். அதில் சிவகங்கை மாவட்டம் பூவந்தியை சேர்ந்தவர்கள் செல்வம் (வயது-23) மற்றும் அக்கினிராஜ் ( வயது -25) ஆகியோர் ஆல்பத்திற்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தனர். அக்கினிராஜின் உடல் திருப்புவனம் அரசு ஆஸ்பத்திரியிலும், செல்வம் உடல் மதுரை அரசு ஆஸ்பத்திரியிலும் பிரேத பரிசோதனைக்கு வைக்கப்பட்டுள்ளன. இந்த சம்பவத்தில் காயமடைந்தவர்கள் சிவகங்கை திருப்புவனம் , மதுரை ஆகிய இடங்களில் உள்ள அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவத்தில் 15 பேருக்கு மேல் காயம் அடைந்துள்ளனர் என கூறப்படுகிறது. காயம் அடைந்தவர்கள் எங்கெங்கு உள்ளனர் ? அவர்களின் விபரங்கள் என்ன என்று மேலூர் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.