செப்டம்பர் 1-ம் தேதி கல்லூரிகள் திறக்கப்பட உள்ள நிலையில், அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை கல்லூரிக் கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ளது. அதில் கொரோனா சிகிச்சை மையங்களாக மாற்றப்பட்டுள்ள கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு, ஆன்லைன் வகுப்புகள் மட்டுமே தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பரவல் காரணமாக கல்லூரிகள் மூடப்பட்ட நிலையில்,இப்போது கொரோனாவின் தாக்கம் சற்று குறைந்து வருகின்றது. இந்நிலையில் வரும் செப்டம்பர் 1ம் தேதி முதல் திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. எனவே கல்லூரிகள் திறப்புக்கான வழிகாட்டு நெறிமுறைகளை கல்லூரிக் கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ளது. அதன்படி, கல்லூரி திறப்பதற்கு ஒரு வார காலத்துக்கு முன்பே கல்லூரி வளாகத்தை சுத்தப்படுத்தி தயார் நிலையில் இருக்க வேண்டும் எனவும் கொரோனா சிகிச்சை மையங்களாக மாற்றப்பட்டுள்ள கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு, ஆன்லைன் வகுப்புகள் மட்டுமே தொடரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மாணவர்கள், பேராசிரியர்கள், பணியாளர்கள் இரண்டு தவணை தடுப்பூசி போட்டிருப்பது கட்டாயம் எனவும் தடுப்பூசி போடாத பேராசிரியர்கள், பணியாளர்கள் கட்டாய விடுப்பில் அனுப்பப்படுவர் என கூறப்பட்டது.. அத்துடன் தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்களுக்கு அந்தந்த கல்லூரிகளிலேயே தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்ய வேண்டும் எனவும் மாற்றுத் திறனாளி மாணவர்கள் கல்லூரிகளுக்கு வருகை தர அவசியமில்லை என கல்லூரிக் கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.
தொடர்ந்து கல்லூரிக் கல்வி இயக்ககம் வெளியிட்ட அறிக்கையில் நோய்த்தொற்று உள்ள மாணவர்களைக் கண்டறிந்தால், அவருடன் தொடர்புடைய அனைவருக்கும் RT – PCR சோதனை எடுக்க வேண்டும் எனவும் நுழைவாயில்களில் கண்காணிப்பு குழு அமைத்து வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்படுகிறதா என்று சரிபார்க்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.