மத்திய அரசு கரும்பு விவசாயிகளுக்கான நிலுவைத் தொகையான ரூ.4 ஆயிரம் கோடியை செலுத்த பணம் இல்லை என்கிறது என காங்., பொதுச்செயலர் பிரியங்கா விமர்சித்துள்ளார்.
காங்கிரஸ் சார்பில் மொராதாபாத்தில் நடந்த பேரணியில் பேசிய பிரியங்கா மோடி அரசின் செயல்பாட்டை கடுமையாக சாடியுள்ளார். காங்கிரசு அடுத்து ஆட்சி அமைத்தால் 20 லட்சம் வேலைவாய்ப்புகள் வழங்கப்படும். ஒவ்வொரு மாவட்டத்திலும் உற்பத்தி மையங்கள் திறக்கப்படும். வளர்ச்சியை அடிப்படையாக வைத்தே காங்கிரஸ் தேர்தலில் போட்டியிடுகிறது.
உரத் தட்டுப்பாட்டால் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வது பற்றி இந்த அரசு கண்டுகொள்ளவில்லை. உயிரிழந்த இரண்டு விவசாயிகளின் குடும்ப உறுப்பினர்களை சந்தித்தேன். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளிடம் இருந்து நெல் மற்றும் கோதுமை குவிண்டாலுக்கு ரூ.2500க்கும், கரும்பு குவிண்டால் ரூ.400க்கும் வாங்குவோம், விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்வோம்.
மேலும், வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகளுக்கு பிரதமர் மோடி மரியாதை செலுத்தவில்லை. கரும்பு விவசாயிகளுக்கான அனைத்து நிலுவைத் தொகையையும் செலுத்த 4,000 கோடி ரூபாய் மட்டுமே தேவைப்படும். ஆனால் கடந்த ஆண்டு கோவிட் பரவல் காலத்தில் பிரதமர் மோடி ரூ.8,000 கோடியில் தனியார் விமானங்களை வாங்கியுள்ளார்.பார்லிமென்டை அழகுப்படுத்த மத்திய அரசு ரூ.20,000 கோடி செலுத்துகிறது. ஆனால் விவசாயிகளின் நிலுவைத் தொகையை செலுத்த பணம் இல்லை என்கிறது நம்பும்படி இல்லை என அவர் தெரிவித்தார்.