வால்பாறையில் முதன் முறையாக 40க்கும் மேற்பட்ட யானைகள் கூட்டம் தேயிலை தோட்டத்தில் முகாமிட்டிருக்கின்றன.
கோவை மாவட்டம் வால்பாறை சுற்றுவட்டார பகுதிகளில் தற்போது காட்டு யானைகள் கூட்டமாகவும் தனித்தனியாகவும் ஆங்காங்கே உலாவருகிறது. இந்நிலையில் வால்பாறை அடுத்துள்ள முத்துமுடி எஸ்டேட் பகுதியில் நேற்று வனப்பகுதிக்குள் இருந்து திடீரென 40க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் தேயிலை தோட்டத்திற்குள் புகுந்தன.
யானைகள் கூட்டம் கூட்டமாக தேயிலை தோட்டத்திற்குள் வருவதைப் பார்த்த தோட்டத் தொழிலாளர்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். உடனடியாக வனத்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
விரைந்து வந்த வனத்துறையினர் யானைகளின் நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர்.
யானைகள் ஒன்றுகூடி இருப்பதால் அப்பகுதி பொது மக்களின் கவலையும் அச்சமும் அதிகரித்துள்ளது. எனவே, அப்பகுதிக்கு பொதுமக்கள் யாரும் செல்ல வேண்டாம் என்றும், மாலை வேளையில் தொழிலாளர்கள் அனைவரும் தங்கள் வீட்டின் முன்புறம் விளக்குகளை பிரகாசமாக எரிய விட வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. சுற்றித் திரியும் யானைகள் தற்போது இருக்கும் பகுதியில் இருந்து அடுத்த பகுதிக்கு செல்லும் போது குடியிருப்பு பகுதிகள் நுழையாதவாறு வனத்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.