

சேலம் மாவட்டம் எடப்பாடியில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது;
“திமுக ஆட்சியில் வழங்கப்பட்ட பொங்கல் தொகுப்பில் ரூபாய் 500 கோடி வரை ஊழல் நடந்துள்ளது. தரமற்ற பொருட்கள் வழங்கப்பட்டதால் தமிழக மக்கள் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாட முடியவில்லை.கொரோனாவை கட்டுப்படுத்த திமுக அரசு தவறிவிட்டது. மக்களிடையே போதிய விழிப்புணர்வை ஏற்படுத்தாத காரணத்தால் 600 ஆக இருந்த தொற்று எண்ணிக்கை 40 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை அதிகரித்துள்ளது.இவற்றை திசை திருப்பவே லஞ்ச ஒழிப்புத் துறையினரை பயன்படுத்தி சோதனை நாடகங்களை திமுக அரங்கேற்றி வருகிறது. முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் வீட்டில் நடைபெறும் சோதனை அரசின் பழிவாங்கும் நடவடிக்கை.ஆட்சிப் பொறுப்பேற்ற கடந்த எட்டு மாதங்களில் திமுக எந்த ஒரு திட்டத்தையும் நிறைவேற்றவில்லை. அதிமுக ஆட்சிக் காலத்தில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களைத்தான் முதலமைச்சர் தொடங்கி வைக்கிறார். அதிமுக ஆட்சியில் 75 கூட்டுக் குடிநீர் திட்டங்கள் தொடங்கப்பட்டது.
உயர்நீதிமன்ற உத்தரவுபடி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை எந்த முறைகேடும் இல்லாமல் நேர்மையாக நடத்த தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.
