• Mon. Jan 20th, 2025

சுடுமண் பானை கண்டெடுப்பு

Byவிஷா

Dec 27, 2024

விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை அருகே உள்ள மேட்டுப்பட்டியில் 3ஆம் கட்ட அகழாய்வுப் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்று மூடியுடன் கூடிய சுடுமண் பானை கண்டெடுக்கப்பட்டுள்ளது என தொல்லியல் துறை அறிவித்துள்ளது.
கடந்த ஜூன் 18ஆம் தேதியன்று, விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டையில் 3ம் கட்ட அகழாய்வை காணொலி காட்சி மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள வெம்பக்கோட்டை விஜய கரிசல்குளம் மேட்டுக்காட்டில் கடந்த 2022-ம் ஆண்டு மார்ச் 16-ம் தேதி முதலாம் கட்ட அகழாய்வு பணிகள் தொடங்கப்பட்டன. 2022 செப்டம்பர் மாத இறுதிவரை இப்பணிகள் நடைபெற்றன.
இந்த அகழாய்வில், நுண் கற்காலம் முதல் வரலாற்று தொடக்க காலம் வரை இப்பகுதியில் பயன்படுத்தப்பட்ட பானை ஓடுகள் அதிகளவில் கண்டெடுக்கப்பட்டன. அதோடு, நுண்கற்கால கருவிகள், பல வகையான பாசிமணிகள், சுடு மண்ணாலான காதணிகள், பொம்மைகள், தக்காளி, சங்ககால வளையல்கள், மோதிரங்கள், சில்லு வட்டுகள், இரும்பு உருக்கு கழிவுகள், சங்கு வளையல்கள் என 3,254 பழங்கால பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன.
2-ம் கட்ட அகழாய்வு பணிகள் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்கின. பழங்கால பானை ஓடுகள் அதிகளவில் கண்டெடுக்கப்பட்டன. அதோடு, சங்கு வளையல்கள், சுடுமண் காதணிகள், யானை தந்தத்தால் செய்யப்பட்ட பொருள்கள் என சுமார் 4,660 பழங்கால பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் தற்போது நடைபெற்று வரும் 3ஆம் கட்ட அகழாய்வில் சுடுமண் பானைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது என்று தொல்லியல் துறை தகவல் தெரிவித்துள்ளது.