• Thu. May 9th, 2024

செங்கல் வைத்து பூஜை செய்த தோப்பூர் ஊராட்சி மன்ற தலைவர்

ByN.Ravi

Mar 5, 2024

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு, இரண்டு பூமி பூஜையுடன் வேலைப்பணிகள் துவங்கியது. கடந்த பூமி பூஜையின் போது ஒரு செங்கல் வைத்தது ராசி இல்லை என கூறி, தோப்பூர் ஊராட்சி மன்றத் தலைவர் சேகர் இரண்டு செங்கல் வைத்து பூஜை செய்தார்.
மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் தாலுகா, தோப்பூர் ஊராட்சிக்கு உட்பட்ட ஆஸ்டின்பட்டி பகுதியில், சுமார் 220 ஏக்கர் பரப்பளவில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான அடிக்கல் நாட்டு விழா கடந்த 2019 ஆம் ஆண்டு ஜனவரி 27 ஆம் தேதி நடைபெற்றது.
முதல் கட்டமாக ரூபாய் 1287 கோடி திட்டப் பணிகள் அறிவிக்கப்பட்டு பின்னர், ஜப்பான் ஜெய்கா நிறுவனத்துடன் இணைந்து சுமார் 1896 கோடி ரூபாய் மதிப்பில் பணிகள் நடை பெறும் என, அறிவிக்கப்பட்டது.
தற்போது, இதன் கட்டுமான பணிகளுக்கு லார்சன் & டூப்ரோ நிறுவனம் 36 மாதங்களில் பணிகளை முடிக்க ஒப்பந்தம் செய்துள்ளது.
அதனைத் தொடர்ந்து, எந்தவித பணிகளும் நடைபெறாமல் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான மாணவர் சேர்க்கை மட்டும் கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெற்று மதுரை எஸ்ம்ஸ் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் ராமநாதபுரம் மருத்துவ கல்லூரியில் பயின்று வருகின்றனர்.
இந்நிலையில், வரும் நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்பு வரும் உள்ள சூழ்நிலையில் ஒன்றிய அரசு சார்பில் எய்ம்ஸ் கட்டுமான பணிக்காக இரண்டாவது முறையாக பூமி பூஜை நடைபெற்றது .
இதில், தோப்பூர் ஊராட்சி மன்றத் தலைவர், சட்டமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர் என யாரையும் அழைக்காமல், தன்னிச்சையாக பூமி பூஜை நடைபெற்றது.
எல் &என்டி நிறுவனத்திற்கு எய்ம்ஸ் கட்டுமான பணிகள் வழங்கப்பட்டுள்ளதால், எய்ம்ஸ் பணிகளை துவக்குவதற்காக l&t நிறுவனம் தனியார் ஒப்பந்ததாரர் மணி என்பவரிடம் இடத்தை சுத்தம் செய்ய ஒப்பந்தம் செய்தனர்.
அதன் அடிப்படையில், இன்று வாஸ்து நாளான பூமி பூஜை நடைபெற்றது. இதில், இரண்டு மணி நேரத்திற்குள் வைத்திருந்த எய்ம்ஸ் மருத்துவமனை போர்டு மற்றும் இருக்கைகள் அனைத்தையும் காலி செய்து கிளம்பினார்.
இதனை அடுத்து,தகவல் அறிந்து வந்த தோப்பூர் ஊராட்சி மன்ற தலைவர் சேகர் மற்றும் ஊராட்சி செயலாளர் வடிவேல் ஆகியோர் இடத்தை பார்வையிட்டு ஏற்கனவே, பூமி பூஜை நடந்த இடத்தில் மீண்டும் ஊராட்சி மன்ற தலைவர் சேகர் இரண்டு செங்கலை வைத்து அவற்றிற்கு சந்தன குங்குமம் வைத்து பூஜைகள் செய்தார்.
இது குறித்து, கேட்டபோது 2019-ல் அடிக்கல் நாட்டு விழா என்ற பெயரில் ஒரு செங்கல் வைத்தது வாஸ்து படி எந்த திட்டமும் நடைபெறவில்லை.
ஆகையால், இனி வரும் காலங்களில் கட்டுமான பணிகள் விரைந்து நடைபெற இரண்டு செங்கல் வைத்து பூஜை செய்தோம் எனக் கூறினார் – கட்டுமான நிறுவனம் சார்பில் வாஸ்து பூஜை செய்த இரண்டு மணி நேரத்தில் பேனர் போர்டு இருக்கைகள் போன்றவை கழற்றி சென்றது பார்வையாளர்களுக்கு வெறும் ஏமாற்றம் அளித்தது.
இது வெறும் அறிவிப்பு தானா அல்லது செயல்படுத்தும் திட்டமா என கேள்வி எழுப்பி உள்ளனர் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *