மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே விக்கிரமங்கலம் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் 2000 க்கும் மேற்பட்ட ஏக்கரில் நெல் சாகுபடி செய்துள்ளதாக கூறப்படுகிறது.,

இந்த பகுதியில் விளைந்த நெல்-யை கொள்முதல் செய்ய அரசின் நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்பட்டு வந்த நிலையில், இந்த ஆண்டு கொள்முதல் நிலையம் இந்த ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் அமைக்கப்படவில்லை.,
இதன் காரணமாக அருகாமையில் உள்ள கிராமங்களில் உள்ள அரசு கொள்முதல் நிலையங்களுக்கு விவசாயிகள் தங்களது நெல்மணிகளை கொண்டு செல்கின்றனர்.,
அவ்வாறு விக்கிரமங்கலத்தை அடுத்துள்ள மலையூரைச் சேர்ந்த பூங்கொடி பாண்டி என்பவர் தனது 10 ஏக்கர் நிலத்தில் விளைவித்த நெல்மணிகளை கடந்த 15 நாட்களுக்கு முன்பு அறுவடை செய்து, தனது கிராமத்தில் கொள்முதல் நிலையம் வரும் என எதிர்பார்த்து காத்திருந்ததாகவும், கொள்முதல் நிலையம் அமைக்கப்படாததால் அருகில் உள்ள குறவக்குடி கொள்முதல் நிலையத்திற்கு கொண்டு சென்றுள்ளார்.,

அங்கு விவசாயியின் நெல் மணிகள் பழைய நெல் போன்று உள்ளதாக கூறி அதிகாரிகள் கொள்முதல் செய்ய மறுத்ததால் அதிர்ச்சியடைந்த பூங்கொடி, கிராம நிர்வாக அலுவலர் நேரில் ஆய்வு செய்து வழங்கிய சான்று கூட செல்லாது என கூறி வருவதாகவும், கொள்முதல் செய்யும் அதிகாரிகள் தனது நிலத்தை பார்வையிட்டு கூட கொள்முதல் செய்யலாம் எனவும்., கடன் பெற்று நெல் சாகுபடி செய்ததன் அறுவடை கூலியை கூட கொடுக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக கண்ணீர் மல்க வேதனையுடன் தெரிவிக்கிறார்.,
அரசு கொள்முதல் நிலையம் அமைப்பதில் ஏற்பட்ட பிரச்சனையால் விவசாயியின் நெல் கொள்முதல் செய்ய மறுப்பதாக எழுந்த புகாரில் அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.,




