தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி பகுதியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் பல்வேறு அரசு துறை சார்ந்த அதிகாரிகளுக்கான பதவி உயர்வுக்கான தேர்வு நடைபெற்றது. காலை 9.30க்கு தேர்வு என்றும், தேர்வு மையத்திற்குள் 8.45 மணிக்கு வர வேண்டும் என்று தேர்வு எழுதுபவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் தேர்வு எழுத நூற்றுக்கணக்கானோர் ஒருவர் பின் ஒருவராக வந்தனர்.
இந்நிலையில் துறை தேர்வு எழுத வந்தவர்களின் சுமார் 30க்கும் மேற்பட்டோரை தாமதமாக வந்ததாக கூறி தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்படவில்லை. தாங்கள் அனைவரும் தொலை தூரத்தில் இருந்து வருவதாகவும் தங்களை அனுமதிக்க வேண்டும் என்றும் முறையிட்டனர். ஆனால் அவர்களை தேர்வு நடத்தும் அதிகாரிகள் அனுமதிக்காத காரணத்தால் தேர்வு எழுத வந்தவர்கள் கல்லூரி முன்பு செய்வதறியாது நின்றனர். இதுகுறித்து தகவல் கிடைத்ததும் ஆண்டிப்பட்டி டி.எஸ்.பி தங்ககிருஷ்ணன் நேரில் வந்து தேர்வு எழுத வந்தவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை அனுப்பி வைத்தனர். இதனால் பதவி உயர்வுக்காக ஆசையுடன் தேர்வு எழுத வந்த அரசு பணியாளர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.