உதகை ஏடிசி சுதந்திர திடல் முன்பு வடமாநில தொழிலாளர்களை நீலகிரி மாவட்டத்தில் பணியமர்த்த கூடாது என்பதனை வலியுறுத்தியும் மாநில, மத்திய அரசை கண்டித்து தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் நீலகிரி மாவட்டத்தில் நடைபெறும் கட்டுமான தொழில்கள், தோட்ட நிறுவன தொழில்கள், உணவகங்கள் மற்றும் தங்கும் விடுதிகளில் தமிழகத்தை சார்ந்த அமைப்புசாரா தொழிலாளர்கள் பணிபுரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும், வட மாநிலங்களில் இருந்து தமிழகத்தில் தங்கி பணிபுரியும் அமைப்பு சாரா தொழிலாளர்கள் ஆங்காங்கே பல்வேறு குற்ற நடவடிக்கைகளை ஈடுபட்டு வருகின்றனர்.
இதனை தடுக்கும் நோக்கில் நீலகிரி மாவட்டத்தில் தங்கி பணிபுரியும் மாவட்ட தொழிலாளர்களை தினந்தோறும் கண்காணிக்க மாவட்ட அளவில் குழு அமைக்கப்பட வேண்டும், நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு தொழில்களில் ஈடுபடும் உரிமையாளர்கள் முதலாளிகள் வேலை அளிப்பவர்களை அழைத்து வடமாநில தொழிலாளர்களை பணிக்கு அமர்த்தும்போது கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்து கூட்டங்கள் நடத்தி அறிவுறுத்துவதோடு பெரும்பாலான தமிழகத்தைச் சேர்ந்த அமைப்புசாரா தொழிலாளர்கள் பணிபுரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் மத்திய மாநில அரசுகளுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட அமைப்பு சாரா தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.