• Thu. Oct 9th, 2025
WhatsAppImage2025-10-02at0218222
WhatsAppImage2025-10-02at0218215
WhatsAppImage2025-10-02at0218217
WhatsAppImage2025-10-02at0218218
WhatsAppImage2025-10-02at0218212
WhatsAppImage2025-10-02at0218219
WhatsAppImage2025-10-02at0218211
WhatsAppImage2025-10-02at0218214
WhatsAppImage2025-10-02at021822
WhatsAppImage2025-10-02at0218223
WhatsAppImage2025-10-02at0218216
WhatsAppImage2025-10-02at0218213
WhatsAppImage2025-10-02at0218221
WhatsAppImage2025-10-02at021821
previous arrow
next arrow
Read Now

தீரன் பட பாணியில் துப்பாக்கியால் சுட்டும், கத்தி யால் வெட்டியும் நகை கொள்ளை

Byமதி

Dec 18, 2021

அரக்கோணத்தில் தீரன் பட பாணியில் துப்பாக்கியால் சுட்டும், கத்தியால் வெட்டியும் 25 பவுன் நகை கொள்ளை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அரக்கோணம் அடுத்த செய்யூர் கன்னிகாபுரம் பகுதியை சேர்ந்தவர் கோபி என்பவரது மனைவி 52 வயதான சுதா. இவரது மகன் 24 வயதான புஷ்கரன், ஆடிட்டர் ஒருவரிடம் உதவியாளராக வேலை பார்த்து வருகிறார்.

இவர்கள் கிராமத்திற்கு வெளியில் தங்களுக்கு சொந்தமான வயலின் நடுவே தனியாக வீடு கட்டி வசித்து வருகின்றனர். நேற்று இரவு புஷ்கரன் அவரது தாயார் சுதா, பெரியம்மா லதா (57), பாட்டி ரஞ்சிதம்மாள் (76) ஆகியோர் வீட்டில் படுத்து தூங்கி கொண்டிருந்தனர்.
அப்போது நள்ளிரவில் 3 பேர் வீட்டின் கதவைத் தட்டியுள்ளனர், யாரோ உறவினர் வந்திருப்பதாக நினைத்த புஷ்கரன் கதவைத் திறக்கச் சென்றார். அப்போது வீட்டிற்கு வெளியே முகமூடி அணிந்த மர்ம நபர்கள் கையில் துப்பாக்கி மற்றும் கத்தி போன்ற பயங்கர ஆயுதங்களுடன் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

சுதாரித்துக்கொண்ட அவர் உடனடியாக கதவை உட்புறமாக பூட்டினார். இருப்பினும் மர்மநபர் ஒருவர் ஜன்னல் வழியாக புஷ்கரனை நோக்கி துப்பாக்கியால் சுட்டார். சத்தம் கேட்டு கண்விழித்த அவரது குடும்பத்தினர் கதறி கூச்சலிட்டனர். அந்த நேரத்தில் மர்மநபர்கள் கதவை உடைத்து வீட்டுக்குள் புகுந்தனர். புஷ்கரனை கத்தியால் வெட்டியும், புஷ்கரனின் தாயார், பெரியம்மா, பாட்டி ஆகியோரையும் துப்பாக்கியால் சுட்டுள்ளனர்.

இந்தி, ஆங்கிலம், தமிழ் ஆகிய மொழிகளில் மாறி மாறி பேசி அந்த கும்பல் அவர்களை மிரட்டினர்.

துப்பாக்கி முனையில் மிரட்டிய கும்பல் வீட்டில் இருந்த மொத்தம் 25 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.60 ஆயிரம், 3 செல்போன் ஆகியவற்றை கொள்ளையடித்தனர். பின்னர் அவர்கள் வீடு முழுவதும் மிளகாய் பொடி தூவினர்.

இந்த கொள்ளை சம்பவம் குறித்து போலீசில் புகார் அளிக்க கூடாது. மீறி புகார் அளித்தால் நாங்கள் மீண்டும் இங்கு வருவோம். உங்கள் அனைவரையும் கொலை செய்வோம் என மிரட்டி விட்டு சென்று விட்டனர்.

புஷ்கரன் செல்போன் மட்டும் கொள்ளையர்கள் கண்ணில்படவில்லை. அந்த போன் மூலம் அரக்கோணம் டவுன் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

நாட்டு துப்பாக்கியால் சுட்டதில் படுகாயமடைந்த புஷ்கரன், சுதா, லதா மற்றும் ரஞ்சிதம்மாள் உட்பட 4 பேரையும் அரக்கோணம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

பிறகு மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொள்ளையில் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

தீரன் சினிமா பட பாணியில் ஊருக்கு வெளியில் விவசாய நிலத்தில் தனியாக வீடு இருப்பதை நன்றாக நோட்டமிட்டு கும்பல் கொள்ளையை அரங்கேற்றி உள்ளனர். அதிரடியாக வீட்டுக்குள் நுழைந்து துப்பாக்கியால் சுட்டும் கத்தியால் வெட்டியும் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.