

தமிழகத்தில் ஊரடங்கில் மேலும் தளர்வுகள் அளிப்பது தொடர்பாக பிப்ரவரி 14-ஆம் தேதி முதலமைச்சர் முக ஸ்டாலின் ஆலோசனை மேற்கொள்கிறார். சென்னை தலைமை செயலகத்தில் மருத்துவத்துறை உள்ளிட்ட உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஆலோசனை நடத்த உள்ளார்.
வரும் 15-ஆம் தேதியுடன் ஊரடங்கு கட்டுப்பாடுகள் முடியும் நிலையில், மேலும் தளர்வுகள் குறித்து ஆலோசனை நடத்தவுள்ளார். தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில், கொரோனா கட்டுப்பாடுகள், இரவுநேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.
இதன்பின் தொற்று பரவல் படிப்படியாக குறைந்ததை தொடர்ந்து இரவுநேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமைகளில் ஊரடங்கு ரத்து செய்யப்பட்டு, பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் அனைத்து பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்பட்டது.
ஆனால், திரையரங்குகள் உள்ளிட்ட பொதுமக்கள் கூடும் இடங்களில் 50% மட்டுமே அனுமதி என்றும், இந்த கட்டுப்பாடுகள் பிப்ரவரி 16 வரை அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டது.இந்த நிலையில், ஊரடங்கில் மேலும் தளர்வுகள் அளிப்பது தொடர்பாக பிப்ரவரி 14-ஆம் தேதி முதலமைச்சர் ஆலோசனை மேற்கொள்கிறார்.