வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் சென்னையில் நேற்று காலை முதல் ஆங்காங்கே மழை பெய்துவந்த நிலையில், நேற்று இரவு மழை வெளுத்து வாங்கியது. இந்நிலையில், அதிகாலை 3 மணி முதல் 4 மணிக்குள் காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையைக் கடந்துவிட்டதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, இந்திய வானிலைத் துறையின் தென் மண்டல தலைவர் பாலசந்திரன் பேசுகையில், ”குறைந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் இன்று அதிகாலை 3 முதல் 4 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் சென்னைக்கும் இடையே கரையை கடந்தது. தற்போது வட தமிழக கடலோரப் பகுதியில் நிலை கொண்டுள்ளது. தொடர்ந்து மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து படிப்படியாக வலுவிலக்க கூடும். அடுத்த 24 மணி நேரத்தில் கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், வேலூர், சேலம், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழைக்கு வாய்ப்புள்ளது. மற்ற மாவட்டங்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்யும். இதுவரை வழங்கப்பட்டு வந்த சிவப்பு எச்சரிக்கைகள் அனைத்தும் முழுமையாக விலக்கிக் கொள்ளப்படுகிறது. சென்னையைப் பொறுத்தவரை நகரின் சில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது” என்று தெரிவித்துள்ளார்.