திருச்சி உய்யங்கொண்டான் வாய்க்கால் கரையோரங்களில் முதலைகள் அடிக்கடி தென்படுவதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
தற்போது தமிழகம் முழுவதும் பருவமழை தொடங்கி பெய்து வரும் நிலையில், திருச்சியில் உய்யகொண்டான் வாய்க்கால் அமைந்திருக்கும் குழுமாயி அம்மன் கோயில் பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மாநகரின் சில பகுதிகள் நீரால் சூழப்பட்டுள்ளது.
இந்நிலையில், உய்யகொண்டான் வாய்க்காலில் தொடர்ந்து மழைநீர் சென்று கொண்டிருப்பதால் முதலைகள் கரையில் ஒதுங்குகின்றன. எட்டரை முள்ளிகரும்பூர் பகுதியில் உய்யகொண்டான் வாய்க்கால் கரையில் பொதுமக்களின் கண்களில் முதலைகள் அடிக்கடி தென்படுகிறது. அப்போது அவ்வழியே சென்ற ஒருவர் தன்னுடைய கைபேசியில் வாய்க்கால் கரையில் படுத்திருந்த முதலையை பதிவு செய்துள்ளார்.
ஏற்கனவே மாவட்ட நிர்வாகமும் தீயணைப்புத் துறையினரும் பொதுமக்கள் பாதுகாப்புடன் எச்சரிக்கையுடனும் உய்யகொண்டான் வாய்க்கால் பகுதி கரைகளில் நடந்து செல்ல வேண்டும் என அறிவுறுத்தி உள்ள நிலையில், முதலைகளை உடனடியாக பிடிக்க வேண்டுமென கிராம மக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.