மதுரை அனுப்பானடி பிரதான சாலை ராஜம்மாள் தெருவில் மாரிச்செல்வம் என்பவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார். வழக்கறிஞரான இவர் பாமக மாநில இளைஞரணி துணைப் பொதுச் செயலாளராக பதவி வகித்து வந்தார். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தெப்பக்குளம் காவல் நிலையத்தில் இவர் மீது வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டது.இந்த வழக்கை தொடர்ந்து இவர் கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார்.
இந்நிலையில் ஒரு பத்திரிக்கை அந்த செய்தியின் உண்மை நிலை அறியாமல் தவறான வகையில் செய்திகளை வெளியிட்டு மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனால் மாரிசெல்வம் தொடர்ந்து என்மீது அவதூறு செய்திகளை பரப்பி வருவதாகவும், அந்த பத்திரிக்கை மீது நடவடிக்கை எடுக்கும்படி மாநகர காவல் ஆணையரிடம் புகார் மனு அளித்துள்ளார்.
இந்நிலையில் இன்று காலை 9 மணி அளவில் இரு சக்கர வாகனத்தில் இரண்டு மர்ம நபர்கள் வந்து மாரி செல்வம் வீட்டின் மீது நாட்டு வெடிகுண்டு வீசி சென்றுள்ளனர். இது தொடர்பாக மதுரை கீரைத்துறை காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் ஆவணங்களை சேகரித்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.