பொள்ளாச்சி அருகே உள்ள சேரிபாளையத்தில் உள்ள அரசுமேல்நிலைப்பள்ளியில் மேலும் 2 மாணவர்களுக்கு கொரோனாதொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இதுவரை மொத்தம் 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பள்ளிக்கு இன்று முதல் 3 நாட்கள் விடுமுறை விடப்பட்டுள்ளது.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள சேரி பாளையத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் சுமார் 750 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். தற்போது தமிழக அரசின் உத்தரவுப்படி இந்த பள்ளியில் பகுப்புகள் சுழற்சி முறையில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த பள்ளியில் உள்ள மாணவ -மாணவிகளுக்கு நல்லட்டிபாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ பணியாளர்கள் கொரோனா பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த சிலநாட்களுக்கு முன்பு எடுத்த கொரோனா பரிசோதனையில் 3 மாணவிகள் 1 மாணவர் என மொத்தம் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், 2-ம் கட்டமாக 10,11, 12 ஆகிய வகுப்புகள் மாணவ-மாணவிகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் மேலும் 2 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் மொத்தம் கொரோனா தொற்று எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது. இதனால் பள்ளிக்கு 6 முதல் 12-ம் வகுப்பு வரை அனைத்து வகுப்புகளுக்கும் இன்று முதல் 3 நாட்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்ட மாணவ மாணவிகள் பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தற்போது சேரிபாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் சுகாதார துறையினர் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.