நியூசிலாந்தில் இருந்து ஆஸ்திரேலியா சென்ற மெஜஸ்டிக் பிரின்சஸ் சொகுசு கப்பலில் 800 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.
சீனாவில் கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் பரவ தொடங்கிய கொரோனா இன்னும் முழுமையாக கட்டுக்குள் வரவில்லை. கொரோனா தொடர்ந்து உருமாறிக் கொண்டே இருப்பதால் அது பெரும் சிக்கலாக உருவெடுத்துள்ளது. . வளர்ந்த நாடுகள் தொடங்கி பின் தங்கிய நாடுகள் வரை எதுவும் இதற்கு தப்பவில்லை. இந்த நிலையில் நியூசிலாந்தில் இருந்து 4,600 பயணிகள் மற்றும் கப்பல் பணியாளர்களுடன் மெஜஸ்டிக் பிரின்சஸ் சொகுசு கப்பல் ஆஸ்திரேலியாவை நோக்கி புறப்பட்டு சென்றது. அந்த கப்பல் ஆஸ்திரேலியாவின் சிட்னி அருகே சர்குலர் குவேவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தபோது வழக்கம்போல் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
பரிசோதனை முடிவுகள் வெளியானதில், கப்பலில் இருந்த 800 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது.இதனையடுத்து கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சைகள் வழங்க ஆஸ்திரேலியா சுகாதாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.