சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், ஆசனுார் வனக்கோட்டம்,தாளவாடி வனச்சரகத்திற்குட்பட்ட பாலப்படுகை பழங்குடியினர் கிராமத்தில் உள்ள மலைவாழ் மக்கள் அதிகமாக போதை பொருளை பயன்படுத்துகின்றனர்.அதனால் சத்தியமங்கலம் புலிகள் காப்பக கள இயக்குநர் மற்றும் தலைமை பாதுகாவலர், ஆசனுார் வனக்கோட்ட துணை இயக்குநர் வழிகாட்டுதலின் கீழ் வனம் மற்றும் வன உயிரினங்களைப் பாதுகாப்பது குறித்தும், போதைப் பொருட்கள் பயன்படுத்துவதை தவிர்ப்பது குறித்தும் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.இந்நிகழ்வில் தாளவாடி வனச்சரக அலுவலர் சு.சதிஷ் தலைமை தாங்கினார். கோவையைச் சேர்ந்த அவிரா தன்னார்வ தொண்டு நிறுவன இயக்குநர் ஐஸ்வர்யா தேவ் முன்னிலை வகித்தார்.கோவை பி.எஸ்.ஜி கலை மற்றும் அறிவியல் கல்லுாரியைச் சேர்ந்த காட்சித்தொடர்பியல் துறை மூன்றாம் ஆண்டு பயிலும் மாணவ, மாணவியர்கள் மற்றும் பேராசிரியர்கள் நுாற்றுக்கும் மேற்ப்பட்டோர் கலந்து கொண்டனர்.பாலப்படுகை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியை சேர்ந்த நுாற்றுக்கும் மேற்ப்பட்ட பள்ளி குழந்தைகள் மற்றும் ஏராளமான பழங்குடியின மக்களும் கலந்து கொண்டனர்.
சிக்கள்ளி அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு புகைப்படம் எடுத்தலை பற்றியும், ஆளுமைத் திறன் மேம்பாடு மற்றும் சமூக வலைத்தளங்களை சரியாக பயன்படுத்தும் விதம் பற்றியும் சிறப்பு பயிற்சிகள் வழங்கப்பட்டன. மேலும் அவிரா தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் சார்பில் பழங்குடியின மக்களுக்கு ஆடைகள் வழங்கப்பட்டன.