தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை டிசம்பர் 15ஆம் தேதி வரை நீட்டித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; தமிழ்நாட்டில், கொரோனா நோய்த்தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டிய அவசியம் கருதியும், தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து, தொடர்மழை பொழிந்து வருகின்ற சூழ்நிலையை கருத்தில் கொண்டும், பொதுமக்கள் நலன் கருதி நடைமுறையில் உள்ள ஊரடங்கு கட்டுப்பாடுகள் 15-12-2021 வரை நீட்டித்து உத்தரவிடப்படுகிறது. ஏற்கனவே ஆந்திரபிரதேசம், கர்நாடகா மாநிலங்களுக்கிடையே பொது போக்குவரத்து அனுமதிக்கப்பட்டுள்ளதை போன்று கேரள மாநிலத்திற்கும் பொது போக்குவரத்து அனுமதிக்கப்படுகிறது.
பொதுமக்கள் தேவையின்றி வெளியே வருவதையும், கூட்டம் கூடுவதையும் தவிர்க்க வேண்டும். பொது இடங்களில் முகக்கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். கைகளை அடிக்கடி சோப்பு போட்டு அல்லது கிருமி நாசினி கொண்டு கழுவுவதை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். கோவிட் தொற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்ள பொதுமக்கள் தவறாமல் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளார்.