முதலமைச்சரின் சாலை மேம்பாட்டு திட்டத்திற்கு அனுமதி வழங்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அடுத்த 10 ஆண்டுகளில் 4 வழிச்சாலைகளாக மாறும் 2,200 கி.மீ நீளமுள்ள மாநில நெடுஞ்சாலைகளுக்கு நிர்வாக அனுமதி வழங்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
மாவட்ட தலைமையிடங்கள் மற்றும் தாலுக்கா தலைமையிடங்களை இணைக்கும் விதமாக இரண்டு வழிச்சாலைகளாக இருக்கும் 2200 கி.மீ நீளமுள்ள சாலைகளை மாநில நெடுஞ்சாலைகளாக மாற்றுவதற்கு தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியுள்ளது.
இதேபோல் 6700 கி.மீ நீளமுள்ள சாலைகள் இரண்டு வழிச்சாலைகளாக மாற்றப்பட்டு அகலப்படுத்தப்படும் என்றும், சாலைகள் அகலப்படுத்துவதால் போக்குவரத்து நெரிசல் குறைவதோடு பொதுமக்களின் தங்குதடையற்ற போக்குவரத்து உறுதிப்படுத்தப்படும் என்றும் அரசாணையில் குறிப்பிடபட்டுள்ளது. போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கும் சாலைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு சாலைகள் அகலப்படுத்தப்படும், நிலம் கையகப்படுத்துதல், மரங்களை வெட்டும் பணி இருந்தால் அந்த பணிகள் முடிந்த பின்னரே சாலைகள் விரிவாக்கம் செய்யப்படும், சாலைகளை விரிவாக்கம் செய்ய திட்டமிட்ட சாலைகளில் ஏற்கனவே தரைப்பாலம் இருந்தால் அவைகள் உயர்மட்ட பாலமாக மாற்றப்படும் என்பன உள்ளிட்ட அம்சங்கள் அரசாணையில் இடம்பெற்றுள்ளன.