தொடர் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்களைத் தொடர்ந்து கோவையில் உக்கடம் உட்பட நகரின் முக்கிய இடங்களில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
கோவை சித்தாபுதூர் பாஜக அலுவலகம் மற்றும் இந்து அமைப்பை சேர்ந்தவர்களின் வீடு, அலுவலகம் போன்றவை தொடர்ச்சியாக தாக்குதலுக்கு உள்ளாகி வருகிறது. கோவை நகரில் மட்டும் ஆறு இடங்களில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் நடத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று இரவு முதல் கோவையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. உக்கடம், காந்திபுரம் , டவுன்ஹால் உட்பட நகரின் முக்கிய இடங்களிலும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
கோவை உக்கடம் பேருந்து நிலையத்தில் துணை ராணுவப்படையான RAF போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் கோவை மாநகர போலீசார் காலை முதலே வாகன சோதனைகளிலும் ஈடுபட்டு வருகின்றனர். அசம்பாவித சம்பங்கள் ஏற்படாமல் தடுக்கும் விதமாக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதனிடையே நேற்று இரவு குனியமுத்தூர் காவல் நிலைய எல்லையில் நடைபெற்ற இரண்டு பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் தொடர்பாக குனியமுத்தூர் போலீசார் 3 தனிப்படைகள் அமைத்து தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.