மதுரை விமான நிலையம் 24 மணி நேரம் சேவை தொடங்கியதை ஒட்டி உள்நாட்டு / வெளிநாட்டு விமானங்கள் இயக்குவது குறித்து ஆலோசனை கூட்டம் தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தின் சார்பில் மதுரை காமராஜர் சாலையில் அமைந்துள்ள தொழில் வர்த்தக சங்க அரங்கில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் விமான நிலைய அலுவலர்கள், விமான நிறுவனங்கள் பிரதிநிதிகள், சுற்றுலா நிறுவனங்கள் மற்றும் தொழில் அதிபர்கள், மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தின் தலைவர் ஜெகதீசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன்,
” மதுரை விமான நிலையம் 24 மணி நேரமும் தற்போது செயல்பட துவங்கி உள்ள நிலையில் அடுத்த மூன்று மாதங்களில் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று விமான நிறுவனங்கள் இலக்கு நிர்ணயித்துள்ளது. அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் மதுரை விமான நிலையம் பெரிய பலனை அடையும். மதுரை மெட்ரோ திட்டத்திற்கு ஒன்றிய அரசு உரிய அனுமதி வழங்கி நிதியை கொடுக்க வேண்டும். அடுத்த நிதிநிலை அறிக்கையில் ஒன்றிய நிதி அமைச்சர் மதுரை மெட்ரோ திட்டத்திற்கு நிதி ஒதுக்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்றோம். விமான நிலையம், ரயில் நிலையங்களில் பார்க்கிங் கட்டணம் வசூலிக்கும் நபர்கள் இந்தி தெரிந்தவர்களை மட்டும் நியமிக்க கூடாது இது கட்டணம் வசூலிப்பதற்கான ஒரு யுக்தி” என்றார்.