புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அன்னவாசல் அருகே உள்ள மாங்குடி என்ற கிராமம். இந்த கிராமத்தில் உள்ள மக்கள் மட்டுமல்லாது அருகில் உள்ள மன்னவேலாம்பட்டி, மாராயப்பட்டி உள்ளிட்ட நான்கு கிராம மக்கள் பயன்படும் வகையில் மையப்பகுதியான மாங்குடி ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே 1978 ஆம் ஆண்டு அரசு ஆரம்ப சுகாதார துணை நிலையம் ஏற்படுத்தப்பட்டது.

இங்கு பல ஆண்டுகளாக இந்த அரசு ஆரம்ப சுகாதார துணை நிலையம் செயல்படாமல் பூட்டியே கிடந்திருக்கிறது. இங்கு பணி செய்ய வேண்டியவர்கள் அருகில் உள்ள ஆரியூர், மதிய நல்லூர், அன்னவாசல் ஆகிய ஊர்களில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் அரசு மருத்துவமனையிலும் மாறி மாறி பணிபுரிந்து வருகிறார்கள்.

ஆனாலும் அவர்களில் சிலருக்கு மாங்குடி ஆரம்ப சுகாதார துணை நிலையத்தில் பணிபுரிவதாக கணக்கு எழுதி ஊதியம் வழங்கப்பட்டு வருவதாக கிராம மக்களுக்கு தெரிய வந்தது. தங்களுக்கு எந்த வசதியும் ஏற்படுத்தி தராத நிலையில் இருந்த வசதியையும் இழுத்து மூடி விட்டு வேறு ஊர்களில் செவிலியர்கள் மற்றும் மருத்துவத் துறையினர் பணி புரிவதால் கோபமடைந்த அந்த கிராம மக்கள் இன்று தமிழக வாழ்வுரிமை கட்சியின் பொறுப்பாளர்களுடன் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது இந்த அரசு ஆரம்ப சுகாதாரத் துணை நிலையத்தில் பேய்கள் குடியிருப்பதாகவும் அதனால்தான் இங்கு மருத்துவத் துறையினர் வர மறுக்கிறார்கள் என்றும் அவர்கள் உடனடியாக இங்கு வந்து பணியேற்றுக் கொள்ள வேண்டும், மாராயப்பட்டி மன்னவேலாம்பட்டி ஆகிய கிராம மக்களுக்கும் மருத்துவ வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர். இதுகுறித்து தமிழக வாழ்வுரிமை கட்சியின் மாநில பொறுப்பாளர் நியாஸ் அகமது, மாநில வர்த்தக அணி செயலாளர் முகமது கனி மற்றும் தென்னிந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் மண்டல செயலாளர் செந்தில் மற்றும் கிராம பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

பின்னர் காவல்துறை மற்றும் மருத்துவத்துறையினர் வந்து பேச்சுவார்த்தை நடத்தி இங்குள்ள ஆரம்ப துணை சுகாதார நிலையத்தில் ஏற்படுத்த வேண்டிய அனைத்து வசதிகளையும் ஏற்படுத்தி தருவதாகவும் நிரந்தரப் பணியில் செவிலியர்களை நியமிப்பதாகவும் இந்த கிராம மக்களுக்கு முதல் உதவி சிகிச்சைக்கு எந்த நேரத்திலும் உதவி செய்வோம் என உறுதி அளித்ததன் பேரில் கலைந்து சென்றனர்.




