உத்தரபிரதேச சட்டப்பேரவை தேர்தலில் பிராமணர் வாக்குகளை பெறுவதில் முக்கிய கட்சிகளிடையே போட்டி நிலவுகிறது. இதில் பாஜக சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் தலைமையில் 4 உறுப்பினர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
உ.பி.யில் பிராமண சமூகத்தினருக்கு சுமார் 12% வாக்குகள் உள்ளன. அங்கு யாதவர், முஸ்லிம் மற்றும் தாக்குரைப் போல் இவர்களும் முக்கிய வாக்கு வங்கியாக உள்ளனர். பிராமணர் வாக்குகளை பெறும் கட்சி உ.பி.யில் ஆட்சி அமைக்கும் என்ற கருத்து நிலவுகிறது. எனவே ஆளும் பாஜக, எதிர்க்கட்சிகளான சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் மற்றும் காங்கிரஸ் ஆகியவை பிராமணர் வாக்குகளை கவரும் முயற்சியில் இறங்கியுள்ளன. இதில் பாஜக தேசிய தலைமை முன்னாள் மத்திய இணை அமைச்சரும், மாநிலங்களவை எம்.பி.யுமான ஷிவ் பிரதாப் சுக்லா தலைமையில் ஒரு குழுவை அமைத்துள்ளது.
நொய்டா எம்.பி. மகேஷ் சர்மா, மாநிலங்களவை எம்.பி.யான குஜராத்தின் ராம் பாய், முன்னாள் இளைஞர் பிரிவின் தேசியச் செயலாளர் அபிஜித் மிஸ்ரா ஆகியோர் குழுவில் இடம் பெற்றுள்ளனர். இக்குழுவினர் உ.பி.யின் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் சென்று முக்கிய பிராமணர்களை சந்தித்துப் பேச உள்ளனர்.