

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் நகராட்சி நகர்மன்ற உறுப்பினர்கள் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. ராஜபாளையம் டி. பி மில் சாலையில் அமைந்துள்ள நகராட்சி கூட்டரங்கில் நடைபெற்ற கூட்டத்திற்கு நகர்மன்ற தலைவி ஏ.ஏ. எஸ். பவித்ரா ஷ்யாம் தலைமை வகித்தார். ஆணையர் நாகராஜன் முன்னிலை வகித்தார்.

ராஜபாளையம் நகராட்சியில் தூய்மை பணிகள் மேற்கொள்ளும் ஒப்பந்த நிறுவனத்துக்கு ஆண்டுக்கு ரூ.8.75 கோடி வழங்கியும் துப்புரவு பணிகள் முறையாக நடைபெறாததால் சுகாதார சீர்கேடு நகர மன்ற உறுப்பினர்கள் குற்றச்சாட்டு.
சங்கர் கணேஷ், (காங்கிரஸ்): தூய்மை பணி மேற்கொள்ளும் ஒப்பந்த நிறுவனத்துக்கு ஆண்டுக்கு ரூ.8.74 கோடி வழங்கியும் முறையாக பணி நடைபெறாததால் சுகாதார சீர்கேடு நிலவுகிறது. மின் மயானம் மற்றும் புதிய பேருந்து நிலைய பணிகள் முடிந்தும் திறக்கப்படாமல் உள்ளது.
தலைவர்: தூய்மை பணியை நகராட்சியே ஏற்று நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. மின் மயானம் மற்றும் புதிய பேருந்து நிலையம் விரைவில் திறக்கப்படும்.
ஞானவேல், (திமுக): தொகுதி மேம்பாட்டு நிதியில் உயர் கோபுர மின் விளக்கு அமைக்கும் பணி எம்.பி., எம்.எல்.ஏக்களுக்கு வேண்டியவர்களுக்கு மட்டுமே ஒதுக்கப்படுகிறது. அதனால் நகராட்சி சார்பில் நிதியை பெற்று அனைத்து வார்டுகளுக்கும் பாரபட்சமின்றி பிரித்து வழங்க வேண்டும்.
புறம்போக்கு இடங்களை பயன்படுத்துபவர்களுக்கு மேம்போக்கு தீர்வை அளித்தால், நகராட்சிக்கு வருவாய் ஏற்படும். இதன்மூலம் அங்கு வசிப்பவர்கள் மின் இணைப்பு பெற்றுக் கொள்ள முடியும்.
ஆணையர்: மேம்போக்கு தீர்வை கடந்த காலங்களில் போடப்பட்டு வந்தது. ரூ.150-க்கு கீழ் உள்ள வரிகள் நீக்கப்பட்ட போது, மேம்போக்கு தீர்வை நீக்கப்பட்டு விட்டது. இதுகுறித்து அதிகாரிகளிடம் பேசி உள்ளோம், அதிகாரப்பூர்வமற்ற முறையில் வாய்மொழியாக உத்தரவு அளிப்பதாக கூறி உள்ளனர். அதன்பின் மேம்போக்கு தீர்வை போடப்படும்.
16-வது வார்டில் அங்கன்வாடி மையம் கட்டப்பட்டு 2 ஆண்டுகள் ஆகியும் திறக்கப்படாததால் சமூக விரோத செயல்கள் நடைபெறுகிறது. அங்கன்வாடி மையத்தை திறக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
தலைவர்: சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றித் திரியும் மாடுகளை பிடிக்க நான் உட்பட கவுன்சிலர்கள் பலமுறை முறையிட்டும் நடவடிக்கை எடுக்கவில்லை.
மாடுகளை பிடித்து கோசாலையில் ஒப்படைக்க அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. காவல்துறை உடன் இணைந்து மாடுகளை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும். கூட்டத்தில் 111 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் நகராட்சி அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
