தென்மாநில முதலமைச்சர்களின் கூட்டத்தில் பங்கேற்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று கேரளா செல்கிறார்.
மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் மண்டல அளவில் கவுன்சில் கூட்டங்கள் நடத்தப்படுவது வழக்கம் . இதில் மாநிலங்களில் சட்டம் ஒழுங்கு நிலைமை, கட்டமைப்பு வசதிகள், சுகாதாரம், மாநில எல்லை விவகாரங்கள், பெண்கள் பாதுகாப்பு, மாநிலங்களுக்கிடையேயான நதிநீர் பங்கீடு உள்ளிட்ட அம்சங்கள் குறித்து ஆலோசிக்கப்படும். அதன்படி தென் மாநிலங்களின் முதல்வர்கள் பங்கேற்கும் 30வது தென் மண்டல கவுன்சில் கூட்டம் வருகிற நாளை கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடைபெறுகிறது. இதில் தமிழகம் ,புதுச்சேரி ,கேரளா, ஆந்திரா ,தெலுங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களை சேர்ந்த முதல்வர்கள் பங்கேற்க மத்திய உள்துறை அமைச்சகம் அழைப்பு விடுத்துள்ளது. இந்நிலையில் இன்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திருவனந்தபுரம் செல்கிறார். காலை 11:40 மணிக்கு விமானம் மூலம் திருவனந்தபுரம் செல்லும் அவரை கேரள திமுக அமைப்பு செயலாளர் முருகேசன் வரவேற்கிறார். அத்துடன் இன்று பிற்பகலில் அவர் முதலமைச்சர் பினராயி விஜயனை சந்திக்கிறார். இந்த சந்திப்பின்போது முல்லைப் பெரியாறு அணை விவகாரம் குறித்து விவாதிக்க உள்ளதாக தெரிகிறது. அத்துடன் இரு தலைவர்களும் பேபி அணையை பலப்படுத்துதல், சிறுவாணி ,செய்யாறு பிரச்னை குறித்த விஷயங்கள் குறித்து பேசுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.