• Fri. Apr 19th, 2024

சிறுவன் கலாமுக்கு வீடு வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவு!

சிறுவன் அப்துல் கலாம் பேசிய பேச்சு வைரலானதையடுத்து, அவர்களின் வீட்டை காலி செய்ய சொல்லி நிர்ப்பந்தம் தரப்படுவதாக சிறுவனின் தாயார் கண்ணீர் பேட்டி தந்துள்ளார். இது பொதுமக்களுக்கு அதிர்ச்சியை தந்து வருகிறது..

“என்ன எல்லாரும் பல்லன்னு தான் கூப்டுவாங்க.. ஆனா எனக்கு எல்லாரையுமே புடிக்கும், எல்லாரும் நண்பர்கள் மாறி தான் என்று சிறுவன் அப்துல் கலாம் பேசிய பேச்சு தமிழக மக்களின் கவனத்தை ஈர்த்தது.

சென்னையை அடுத்த கண்ணகி நகர் பகுதியை சேர்ந்த சிறுவன் தான் அப்துல் கலாம். 7-ம் வகுப்பு படிக்கிறான்.. ஒரு சேனலுக்கு அளித்த பேட்டியில் ஒரே நாளில் ஃபேமஸ் ஆகிவிட்டான்… திமுக எம்பி கனிமொழி உட்பட ஏராளமானோர் சிறுவன் தந்த பேட்டிக்கு பாராட்டை தெரிவித்தனர்.

“யாரையும் புடிக்காதுன்னு முதல்ல சொல்லாதீங்க, என்னையும் எல்லாரும் பல்லன்னு தான் கூப்டுவாங்க… நான் ஏன் எல்லாரையும் புடிக்காதுன்னு சொல்லனும்?.. எல்லாரும் நண்பர்கள் மாறி தான். ஒற்றுமை இல்லாத நாடு எதுக்கு இருக்கனும்.. நம்ம நாடு ஒற்றுமையான நாடுனு சொல்றோம், ஒற்றுமை இல்லாம இருந்தா எப்படி? சாதி மத கலவரம் நமக்கு எதுக்கு.. அதெல்லாம் இங்கே தேவையில்லை.. எல்லாருமே இந்தியர்கள்.. எல்லாரும் ஒரே மாதிரிதான்.

எல்லாருக்கும் ரத்தம் கலரு ஒன்னுதான்.. நமக்கு முன்னாடி இருந்தவங்க எல்லாம் சாதி மதம்ன்னு சொல்லி தந்துட்டாங்க.. அதனாலதான் சாதி பத்தி இப்போ வரைக்கும் பேசிட்டு இருக்கோம்” என்று தமிழக மக்களின் கவனத்தை ஈர்த்தவன். இந்நிலையில், அப்துல்லின் அம்மா கண்ணீர் பேட்டி ஒன்றை தந்திருந்தார்.. அதில், “இந்த பையன் பேட்டி தந்து 2 நாள்தான் ஆகுது.. அவனா மனசில பட்டதை பேசினான்.. வேணும்னே பேசல.. அதுக்கே இவ்வளவு அழுத்தம் தர்றாங்க.. நாங்க வீடு இல்லாமல் இங்கே வந்திருக்கோம்.. யார் என்ன சொன்னாங்கன்னு தெரியல.. எங்களை வீடு காலி பண்ண சொல்றாங்க ஹவுஸ் ஓனர்.. நாங்கள் எப்படி வெளியே போனோம்.. வேணாங்க நீங்க உடனே காலி பண்ணுங்க ன்னு சொல்றாங்க.. மனித நேயம் என்பது இங்கேயே செத்து போச்சு” என்று கதறி அழுதார்.

இந்த வீடியோவும் வைரலானநிலையில், நேற்றைய தினம், நேற்றைய தினம் தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின், சிறுவன் அப்துல் கலாமை அவரது பெற்றோருடன் அழைத்து பேசி வாழ்த்தினார். அவருக்கு முதலமைச்சர் அன்பு பரிசு ஒன்றையும் வழங்கினார்.. மேலும், பேச்சையும் செயலும் எல்லாக் காலமும் கடைபிடிக்கவேண்டும் என்றும் கலாமுக்கு அறிவுறுத்தினார். சிறுவனின் பெற்றோருக்கும் தன்னுடைய பாராட்டை முதல்வர் தெரிவித்தார்.

இந்நிலையில், அப்துல் கலாமின் குடும்பத்திற்கு அரசு சார்பில் வீடு வழங்க முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.. இதுதொடர்பாக அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஒரு பதிவு போட்டுள்ளார்.. அதில், “இணையதள தொலைக்காட்சிக்கு மனிதநேயம், மதம் தாண்டிய ஒற்றுமை குறித்து பேட்டியளித்த பள்ளி மாணவர் ஏ.அப்துல்கலாமை, முதலமைச்சர் அவர்கள் நேரில் அழைத்து பாராட்டிய போது, தாங்கள் வறுமை நிலையில் வாடகை வீட்டில் வசிப்பதாகவும் அரசின் சார்பில் தங்களுக்கு வீடு வழங்க வேண்டும் என்று முதல்வரிடம் கோரிக்கை வைத்தனர்.

தமிழக முதல்வர் உத்திரவின் பேரில் இன்று காலை மாணவர் அப்துல் கலாமின் பெற்றோரை நேரில் அழைத்து அவர்களுக்கு எந்த திட்டப் பகுதியில் வீடு ஒதுக்கவேண்டும் என்று கேட்டறிந்து சம்மந்தப்பட்ட துறை சார்ந்த அலுவலர்களை தொடர்புகொண்டு அவருக்கு ஒதுக்கீட்டு ஆணையை விரைவாக தயார் செய்யும்படி கேட்டுக்கொண்டேன். நாளைக்குள் அவர்களுக்கு தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் வீடு ஒதுக்கி ஆணை வழங்கப்படும்.. பின்னர் மாணவர் ஏ.அப்துல்கலாமை பாராட்டி அவருக்கு “பெரியார் இன்றும் என்றும்” நூலினை பரிசாக வழங்கினேன்” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *