தேனி மாவட்டம் பொட்டிபுரத்தில் நியூட்ரினோ ஆய்வகம் அமைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
தேனி மாவட்டம், உத்தமபாளையம் வட்டம், பொட்டிபுரம் அருகே மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு தமிழக அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
அண்மையில், மத்திய அரசின் நியூட்ரினோ திட்டத்துக்கு அனுமதி அளிக்க முடியாது என தமிழக அரசு சாா்பில் உச்ச நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக, தேனி மாவட்டத்தில் நியூட்ரினோ ஆய்வகம் அமைத்தால் தேனி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள வனவிலங்குகள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும், சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படும், விவசாயம் பாதிக்கப்படும் என்றும், இதனால் நியூட்ரினோ ஆய்வகம் அமைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.