
சர்வதேச காற்றாடி திருவிழா வரும் ஆகஸ்ட் 13 ஆம் தேதி நடைபெற உள்ளதை அடுத்து மாமல்லபுரம் மீண்டும் கோலாகலமாக களைக்கட்ட தொடங்கியுள்ளது. சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் 44 ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடைபெற்றது. வெறும் 4 மாதங்களில் செஸ் ஒலிம்பியாட் போட்டிகளுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் தமிழக அரசு மிகச்சிறப்பாக செய்திருந்தது. மேலும் செஸ் ஒலிம்பியாட்டை வெற்றிகரமாக நடத்தியும் முடித்துள்ளது தமிழக அரசு.
உலகம் முழுவதும் 186 நாடுகளை சேர்ந்த 2500 வீரர், வீராங்கனைகளை சிறப்பாக உபசரித்து, உலக நாடுகளை தமிழக அரசு திரும்பி பார்க்க வைத்துள்ளது. இந்த நிலையில், மாமல்லபுரத்தில் சர்வதேச காற்றாடி திருவிழா நடத்தப்பட உள்ளது. வரும் 13 ஆம் தேதி தொடங்கும் இந்த காற்றாடி திருவிழா, 15 ஆம் தேதி வரை 3 நாட்களுக்கு வெகு சிறப்பாக நடைப்பெற உள்ளது. வழக்கமாக, காற்றாடி திருவிழா, குஜராத், கர்நாடக உள்ளிட்ட மாநிலங்களில் தான் நடத்தப்பட்டு வந்தது. செஸ் ஒலிம்பியாட்டியை வெற்றிகரமாக தமிழக அரசு நடத்தியதால், தற்போது முதல்முறையாக சர்வதேச காற்றாடி திருவிழாவும் தமிழகத்தில் நடைபெறவுள்ளது. சுமார் 14 ஏக்கர் பரப்பளவில் மாமல்லபுரத்தில் உள்ள டிடிடிசி ஓஷன் வியூவில் நடைபெறும் இந்த பிரமாண்ட காற்றாடி திருவிழாவில், அமெரிக்கா, தாய்லாந்து, மலேஷியா உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட வெளிநாடுகள் பங்கேற்க உள்ளது. இந்நிகழ்ச்சியில் பல்வேறு உணவுக் கடைகள், விளையாட்டுகள், பட்டம் தயாரிப்பது குறித்த பட்டறைகள், குழந்தைகளுக்கான போட்டிகள் மற்றும் மாலையில் கலை மற்றும் இசை நிகழ்ச்சிகள் நடைப்பெற உள்ளன.
மேலும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க குழந்தைகளுக்கு நுழைவு கட்டணம் இல்லை. பெரியவர்களுக்கான நுழைவு கட்டணமாக ரூ.150 நிர்ணயம் செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால் மாமல்லபுரம் வட்டாரமே கலையுடன் களைக்கட்ட தொடங்கியுள்ளது. செஸ் ஒலிம்பியாட்டிற்கு பிறகு இந்த சர்வதேச காற்றாடி திருவிழாவும் நம்மை மற்ற நாடுகளிடையே உற்று நோக்க வைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.