• Fri. Apr 19th, 2024

சென்னை தி.நகர் பத்மாவதி தாயார் திருக்கோயில் கும்பாபிஷேகம்..!

Byவிஷா

Mar 17, 2023

திருப்பதி தேவஸ்தானம் சார்பில் சென்னை தி.நகரில் கட்டப்பட்டுள்ள பத்மாவதி தாயார் திருக்கோயில் கும்பாபிஷேகம் விமர்சையாக நடைபெற்றது. இதில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
உலகப்புகழ்பெற்ற திருமலை திருப்பதி கோவிலின் நிர்வாகமானது திருப்பதி தேவஸ்தானம். திருப்பதி தேவஸ்தானம் சார்பில் நாடு முழுவதும் பல்வேறு சீனிவாச பெருமாள் கோவில் கட்டப்பட்டுள்ளது. ஆனால், நாட்டிலே முதன்முறையாக ஆந்திராவை தவிர்த்து வெளிமாநிலத்தில் திருப்பதி தேவஸ்தானம் சார்பில் பத்மாவதி தாயாருக்கு கோவில் கட்ட திட்டமிடப்பட்டது.


இதையடுத்து, சென்னை, தி.நகரில் உள்ள ஜி.என்.செட்டி சாலையில் திருப்பதி தேவஸ்தானம் சார்பில் பத்மாவதி தாயார் கோவில் கட்டப்பட்டு வந்தது. ஆலய திருப்பணிகள் முற்றிலும் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, பத்மாவதி தாயார் கோவில் மஹாகும்பாபிஷேகம் இன்று நடந்தது. இன்று காலை 7.30 மணி முதல் 7.44 மணிக்குள் கும்பாபிஷேகம் நடந்தது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கோவிலின் ராஜகோபுரத்தில் ஒரே நேரத்தில் புனிதநீர் தெளிக்கப்பட்டது. கும்பாபிஷேகம் நடைபெற்று முடிந்துள்ளதையடுத்து, காலை 10 மணி முதல் 11 மணிக்கள் பத்மாவதி தாயார் – சீனிவாசா திருக்கல்யாணம் நடக்கிறது.
திருக்கல்யாணம் நிறைவடைந்த பிறகு பக்தர்கள் தரிசனத்திற்காக அனுமதிக்கப்பட உள்ளனர். பத்மாவதி தாயார் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு 20 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காலை, மதியம், இரவு என மூன்று வேளைகளிலும் சாம்பார் சாதம், ரச சாதம், தயிர்சாதம், பொங்கல், வெஜ் பிரியாணி என அன்னதானம் வழங்கப்பட உள்ளது. கோவிலின் எதிரே பிரத்யேகமாக இதற்கென ஒரு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.
மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பக்தர்களுக்கு இலவசமாக 15 ஆயிரம் திருப்பதி லட்டு வழங்கப்படுகிறது. பத்மாவதி தாயார் கோவிலில் காட்சி தரும் பத்மாவதி தாயார் சிலை திருப்பதியில் செய்யப்பட்டது ஆகும். முன்னதாக, நேற்று காலையில் பத்மாவதி தாயார் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. நேற்று காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரை சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இன்று காலை சதுசதனா அர்ச்சனை, மகாசாந்தி ஹோமம் பூர்ணாஹ_தி, கும்ப உத்தப்பன, ஆலய பிரக்தஷனா, சம்பாத்ஜய சபர்ஷனம் ஆகியவை நடந்த பிறகு கும்பாபிஷேகம் நடந்தது. இந்த கும்பாபிஷேகத்தில் தி.நகர் மட்டுமின்றி சென்னையின் பல்வேறு பகுதிகளில் உள்ள ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *