• Tue. Apr 30th, 2024

இரண்டு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..!

Byவிஷா

Jan 4, 2024

அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, தமிழகத்தில் நீலகிரி, தேனி மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடந்த 2ம் தேதி தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, நேற்று முதல் அதே பகுதிகளில் நிலவுகிறது. மேலும், 2ம் தேதி தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில், இலங்கைக்கு தெற்கே, நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி, நேற்று முதல் அதே பகுதிகளில் நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதியில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அது மட்டும் இல்லாமல், ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது.
அதன்படி, இன்று (04.01.24) தேனி மற்றும் நீலகிரி ஆகிய இரண்டு மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், தமிழகத்தில் பரவலாக மிதமான மழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளையும் நீலகிரி மாவட்டத்தில் கனமழை பெய்ய வாய்ப்பிருக்கிறது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் என்றும் சில பகுதிகளில் லேசான மழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 21-22 டிகிரி செல்சியஸாகவும் இருக்கக்கூடும்.
இன்று (04.01.2024) குமரிக்கடல் பகுதிகள், லட்சத்தீவு பகுதிகள், தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *