ஒன்றிய அரசு ஒன் சைட் கேம் ஆடுவது போல தெரிகிறது என நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பேட்டி
மதுரை சுந்தரராஜபுரத்தில் நியாயவிலை கடை கட்டிடம் மற்றும் சுப்பிரமணியபுரத்தில் மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் அலுவலகம் ஆகியவற்றை நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் திறந்து வைத்தார்.பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு,
“ஒன்றிய அரசு பணத்தை வைத்து அரசியல் செய்கிறது. பிலாஸ்பூர் எய்ம்ஸ், மதுரை எய்ம்ஸ் ஒரே நேரத்தில் அறிவிக்கப்பட்டது. ஆனால், ஒன்று திறக்கப்பட்டு விட்டது. ஒன்றுக்கு இன்னமும் சுவர் கூட கட்டவில்லை. அரசியல் ரீதியாக ஒன்றிய அரசு ஒன் சைட் கேம் ஆடுவது போல தெரிகிறது.
பல திட்டத்துக்கு பிரதான் மந்திரி என பெயர் வைத்து மாநில அரசின் நிதியை அதிகமாக எடுத்துக் கொள்கிறது. உதாரணமாக, பயிர் காப்பீட்டுத் திட்டத்துக்கு 75% மாநில அரசின் பங்கு, 25% பங்கு தான் ஒன்றிய அரசின் பங்கு. எனவே, ஒன்றிய அரசு அரசியல் நோக்கத்துடன் தான் அனைத்தையும் செய்வதாக தெரிகிறது. மக்கள் நலனுக்காக எதையும் செய்வதாக தெரியவில்லை. மாநில அரசின் நிதியை அதிகமாக எடுத்துக்கொண்டு எல்லா திட்டங்களுக்கும் பிரதான் மந்திரி பெயரை வைத்து விளம்பரம் செய்து கொண்டிருக்கிறார்கள்.இதை திருத்தியே ஆக வேண்டும். இது குறித்து முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளேன்” என தெரிவித்தார்.