• Sat. Mar 21st, 2026
WhatsAppImage2026-03-20at0033011
previous arrow
next arrow
Read Now

தமிழகத்தில் ராம ராஜ்ஜியம் மலரும் செல்லூர் ராஜூ உறுதி

விரைவில் தமிழகம் ராமராஜ்ஜியமாக மாறும். எம்ஜிஆர் ஜெயலலிதா வழியில் அதிமுக விரைவில் ராம ராஜ்ஜியத்தை கொடுக்கும் என அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.

மதுரையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, ” சொத்துவரியை உயர்த்தி வாக்களித்த மக்களுக்கு துரோகம் செய்த அரசு திமுக அரசு. வாக்களித்த மக்களுக்கு இந்தளவுக்கு யாரும் துரோகம் செய்தது கிடையாது. அதிமுகவின் திட்டங்கள் அனைத்தும் புறக்கணிக்கப்பட்டு உள்ளது. தற்போது திமுக ஆட்சி காலத்தில் விலைவாசி விஷம் போல் ஏறிவிட்டது.

திமுக ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து மக்கள் விரோத நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெறுகிறது. கடந்த 11 மாத காலமாக மோசமான சூழ்நிலை தமிழகத்தில் நிலவுகிறது” என தெரிவித்தார்.

இராமராஜ்ஜியத்தை நோக்கி நாடு முன்னேறுவதாக ஆளுநர் பேசியது குறித்த கேள்விக்கு பதிலளித்த செல்லூர் ராஜு, “பத்தாண்டு காலம் அதிமுக நடத்தியது ராம ராஜ்ஜியம், அப்போது அனைத்து மக்களும் சுபிட்சமாக நலமாக வாழ்ந்தார்கள், அதுவே ராமராஜ்ஜியம். திமுக ஆட்சியால் தமிழகம் கலியுகமாக மாறிவிட்டது.

விரைவில் தமிழகம் ராமராஜ்ஜியமாக மாறும். எம்ஜிஆர் ஜெயலலிதா வழியில் அதிமுக விரைவில் ராமராஜ்ஜியத்தை கொடுக்கும்” என தெரிவித்தார்.