• Thu. Mar 28th, 2024

கோவில்களில் செல்போனுக்கு தடை
மதுரை ஐகோர்ட் உத்தரவு

தமிழக அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களுக்குள் செல்போன் கொண்டு செல்ல மதுரை ஐகோர்ட் தடை விதித்தது. பாதுகாப்பு அறைகள் அமைத்து டோக்கன் வழங்கி செல்போன்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோர்ட்டு உத்தரவிட்டது. திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு வரும் பக்தர்கள் அபிஷேகம், பூஜை ஆகியவற்றை செல்போனில் பதிவு செய்வதாக குற்றச்சாட்டு கூறப்பட்டது. இது ஆகம விதிகளுக்கு முரணானது. எனவே கோவிலுக்குள் செல்போன் கொண்டுவர தடை விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
இது தொடர்பாக சுப்பிரமணிய சுவாமி கோவில் அர்ச்சகர் சீதாராமன் மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை ஏற்கனவே விசாரித்தஐகோர்ட், தமிழ்நாட்டில் உள்ள கோவில்களில் யாரும், என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற நிலை உள்ளது. இது மாற்றப்பட வேண்டும். திருப்பதி கோவிலின் வாசலில் கூட படம் எடுக்க முடியாது. தமிழ்நாட்டில் சாமி சிலைகள் முன்னால் நின்று செல்பி எடுத்துக்கொள்ளும் அளவுக்கு சுதந்திரம் அளிக்கிறார்கள். கோவில்கள் சுற்றுலாத்தலங்கள் கிடையாது என்பதை நினைவில் கொள்ள வேண்டும் என்று கருத்து
தெரிவித்து இருந்தது. மேலும் கோவில்களுக்கு வருபவர்கள் நாகரிகமான ஆடைகள் அணியாமல் டி-ஷர்ட், ஜீன்ஸ், ஷார்ட்ஸ், லெகின்ஸ் போன்ற ஆடைகள் அணிந்து வருவதையும் ஏற்க முடியவில்லை என்றும் ஐகோர்ட் அதிருப்தி தெரிவித்தது.
இது தொடர்பாக கோவில் செயல் அலுவலர் மற்றும் இணை கமிஷனர் ஐகோர்ட்டில் தாக்கல் செய்த அறிக்கையில் கூறியிருந்ததாவது:-
கோவில்கள் பாரம்பரியமாகவே ஒவ்வொருவரின் வாழ்க்கையின் மையமாக இருந்து வருகின்றன. இவை ஒரு வழிபாட்டு தலமாக மட்டுமல்லாமல், மக்களின் சமூக -கலாசார மற்றும் பொருளாதார வாழ்க்கையில் ஒருங்கிணைந்ததாக உள்ளன. தெய்வீகத்தையும், ஆன்மிகத்தையும் அனுபவிக்க லட்சக்கணக்கான பக்தர்களை ஈர்ப்பதற்காக, வாழ்ந்து கொண்டிருக்கும் தலங்கள்தான் கோவில்கள். அரசியலமைப்பு சட்டத்தின் 25-வது பிரிவின் கீழ், அனைவரும் சுதந்திரமாக மதத்தைப்பற்றி பேசுவதற்கும், பின்பற்றுவதற்கும், பிரசாரம் செய்வதற்கும் உரிமை உடையவர்கள் என்பதில் எந்த மாற்று கருத்தும் இல்லை.
ஆனால், கோவிலுக்குள் இத்தகைய சுதந்திரத்தை கடைபிடிப்பது என்பது விதிமுறைகளுக்கு உட்பட்டது. கோவிலில் நடக்கும் வழிபாடுகளில் கடைபிடிக்க வேண்டிய சடங்குகள் குறித்த விதிகளை ஆகமங்கள் வகுத்துள்ளன. அதன்படி, கோவிலின் கண்ணியம், புனிதம் காக்கப்படுகிறது என்பதை கோவில் அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும்.
குருவாயூர், திருப்பதி, மதுரை மீனாட்சி அம்மன் கோவில் என நாட்டின் பல்வேறு கோவில்களில் செல்போன் கொண்டு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதுபோல திருச்செந்தூர் கோவிலிலும் தடை செய்யப்பட்டு உள்ளது. எனவே திருச்செந்தூர் கோவிலில் செல்போன் தடை, ஆடை கட்டுப்பாடுகள் செய்வதற்கான ஏற்பாடுகளை தூத்துக்குடி மாவட்ட கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு ஆகியோர் செய்து தர வேண்டும். தூய்மை மற்றும் புனிதத்தை காக்கும் வகையில் செல்போன் தடை, ஆடை கட்டுப்பாடுகளை தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கோவில்களிலும் இந்து சமய அறநிலையத்துறை கமிஷனர் அமல்படுத்த வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவில் கூறியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *